வாங்காத கடனுக்கு லாரியை பறிமுதல் செய்த வங்கி, பரிதவித்து நின்ற லாரி ஓட்டுநருக்காக, நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி லாரி மீட்டு லாரி உரிமையாளர் பொன்னுரங்கதிடம் ஒப்படைத்த சம்பவம் வீடியோ வெளியாகி பரவி வருகிறது. சென்னையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுநர் பொன்னுரங்கம். இவர் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து லாரியின் மீது கடன் எதுவும் வாங்காமல் டேங்கர் லாரியை விலைக்கு வாங்கி, அவரே ஓட்டுநராக ஓட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை, 16-ஆம் தேதி அன்று பொன்னுரங்கம் அந்த லாரியை, சேலம் வழியாக சமையல் எண்ணெய்யை ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் அந்த லாரியை தடுத்து நிறுத்தியிருக்கிறது. அந்த லாரிக்கு வாங்கியுள்ள கடன் தவணை செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டியது. அவர் கடனே வாங்கவில்லை என்று எவ்வளவோ கூறியுடன், தனியார் வங்கியின் கடன் வசூலிப்பு ஏஜென்சி ஊழியர்கள் ஏற்கவில்லை. அடவாடியாக லாரியை பறிமுதல் செய்துள்ளார்களாம். லாரி உரிமையாளர் பொன்னுரங்கத்தை லாரியில் இருந்து இறக்கிவிட்டு லாரியை எடுத்துச் சென்றுள்ளார்கள்.

இதனால் நடுரோட்டில் கலங்கி நின்ற பொன்னுரங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராஜாமணி, மணல் லாரி கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ், நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அருள், டிரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னுசாமி உள்ளிட்ட லாரி உரிமையாளர்கள் திரண்டனர். அவர்கள் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள சம்மந்தப்பட்ட தனியார் வங்கி கிளைக்கு சென்றனர். அவர்கள் குறிப்பிட்ட தனியார் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடனே வாங்காத லாரியை, கடன் வசூல் ஏஜென்சி மூலம் பறிமுதல் செய்ததை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டித்தனர். ஒருகட்டத்தில் லாரி ஓட்டுநர் பொன்னுரங்கம் கடன் வாங்கவே இல்லை என்பதை தனியார் வங்கி நிறுவனம் ஒப்புக்கொண்டது. மேலும் லாரியை திருப்பி கொடுப்பதாகவும் அங்கேயே ஒப்புக்கொண்டது.
நேற்று அந்த லாரிக்கான கிளியரன்ஸ் ஆர்டர் பெறப்பட்டது. தொடர்ந்து சேலம் பார்க்கிங் மையத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது. இதையொட்டி நாமக்கல், கீரம்பூர் டோல் கேட் அருகில் நடந்த நிகழ்ச்சியில் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், லாரி சாவியை அதன் உரிமையாளர் பொன்னுரங்கத்திடம் ஒப்படைத்தனர். அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், கண்ணீர் மல்க லாரியை எடுத்து சென்றுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரவி வருகிறது.