அரசு பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் உணவு சாப்பிட 4 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கொழிஞ்சி வாடி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 215 மணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதில் 42 மாணவர்கள் உணவு சாப்பிட்டு உள்ளனர்.

பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களான வீரராஜ், சஞ்சித், சரவணன், சுகேஷ் ஆகிய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த தகவல் அறிந்ததும் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் சென்று மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்துள்ளதாகவும், அதனை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.