அரியலூர் அண்ணா சிலை அருகே, 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், நியாய விலைக் கடைகளில் புளூடூத் முறையில் பொருட்கள் வழங்கப்படுவதால் நாள் ஒன்றுக்கு 50 நபர்களுக்கு மட்டுமே விநியோகம் செய்ய முடிகிறது. இதனால் நுகர்வோருக்கும் பணியாளர்களுக்கும் மோதல் போக்கு ஏற்படுகிறது. எனவே, புளூடூத் முறையை கைவிட வேண்டும்.
நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் எடை குறையாமல், முழுமையாக வழங்க வேண்டும். கை விரல் ரேகை, கருவிழி பதிவு ஆகிய இரண்டு முறைகளின் மூலமும் பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் எடையாளர் ஒருவர் பணியமர்த்த வேண்டும். அனைவருக்கும் பதவி உயர்வில் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். விற்பனையாளரும், சங்கத்தின் சிற்றெழுத்தரும் ஒரே பணி நிலையில் உள்ளதால் பதவி உயர்வில் எழுத்தர் பணியிடம் அனுமதிக்கப்படவேண்டும்.
மாவட்டத் தேர்வாணைக்குழு மூலம் நியமிக்கப்பட்ட விற்பனையாளர்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து சுமார் 60, 70 கி.மீட்டர் தொலைவில் பணியமர்த்தப்பட்டு குறைவான சம்பளத்தில் சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர். இவர்களை சொந்த ஊருக்கு அருகாமையில் பணியமர்த்த வேண்டும் உட்பட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பா. சக்திவேல், மாவட்ட பொருளாளர் ஆர். இளவரசு ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர்கள் சு. பாலமுருகன், எம். மணிகண்டன், மாவட்ட இணைச் செயலாளர்கள் சி. பாலு , க. லதா உட்பட நிர்வாகிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.