தமிழக காவல்துறைத் தலைவர் (சட்டம் ஒழுங்கு) சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள், அரசு மரபுகளை மீறி விஜய்க்கு முதலமைச்சர் அளவிலான பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் கூறி பாஜகவின் முன்னாள் நிர்வாகியும், தற்போதைய அரசியல் விமர்சகருமான திருச்சி சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியத் தேர்தல் ஆணையமோ அல்லது பாஜகவோ சிறுபான்மை அந்தஸ்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கிறதா?” எனத் தனது பதிவைத் தொடங்கியுள்ள அவர், ஒரு நபர் எப்போது முதலமைச்சராகக் கருதப்படுவார் என்பதற்கான அரசியலமைப்பு சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நபர் சட்டப்பூர்வமாக முதலமைச்சராக அங்கீகரிக்கப்பட வேண்டிய முறைகள் குறித்து அவர் கூறியுள்ளதாவது: விஜய் இன்னும் முதல்வராகவில்லை.. அதற்கு சட்டமன்றத்தில் தனது கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆளுநரால் முறைப்படி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டு, பதவியேற்பு விழா நடைபெற வேண்டும். ஆளுநரின் முன்னிலையில் பதவியேற்ற பிறகுதான், அந்த நபருக்குரிய அரசு பாதுகாப்பு மற்றும் புரோட்டோகால் (Protocol) நடைமுறைகள் வழங்கப்பட வேண்டும்.
“அதுவரை, சம்பந்தப்பட்ட மாநிலம் ஆளுநர் ஆட்சியின் கீழ் அல்லது அரசியலமைப்பு விதிகளின்படி காபந்து அரசின் கீழ்தான் செயல்படும். முறையாக அரசு அமையும் வரை, தமிழக காவல்துறையின் டிஜிபி ஒருவருக்கு முதலமைச்சர் அளவிலான கான்வாய் (Convoy) அல்லது பாதுகாப்பு நெறிமுறைகளை ஒதுக்க எந்த அதிகாரமும் இல்லை,” என திருச்சி சூர்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக காவல்துறைத் தலைவர் (சட்டம் ஒழுங்கு) சந்தீப் ராய் ரத்தோர், “திமுக ஆட்சியில் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று, ஆவடியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் நீங்கள். பின்னர் சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்தபோது ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு போன்ற சம்பவங்களால் உங்கள் மீதும் அரசு மீதும் கெட்ட பெயர் ஏற்பட்டது. அதன் காரணமாகவே நீங்கள் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டீர்கள்,” என திருச்சி சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “யுபிஎஸ்சி (UPSC) குழுவின் பரிந்துரையால் நீங்கள் தமிழக காவல்துறைத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் அதற்காக நீங்கள் அரசு விதிகளுக்குப் புறம்பாக தவெக தலைவருக்குச் சிறப்பு சலுகைகளை வழங்கக் கூடாது. டிஜிபி மற்றும் தமிழகக் காவல்துறையின் தலைவராக (HOPF) இது உங்கள் கடமையும் அல்ல, கண்ணியமும் அல்ல,” எனச் சாடியுள்ளார்.
“சந்தீப் ராய் ரத்தோருக்கு விஜய் மீது அவ்வளவு அன்பு இருந்தால், அவர் தனது பதவியைத் துறந்துவிட்டு விஜய்க்குத் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகச் சேர்ந்துவிடலாம்,” என்று எள்ளி நகையாடியுள்ளார். ஒரு வரி செலுத்துவோராக, இன்னும் முதலமைச்சராக அங்கீகரிக்கப்படாத ஒரு நபருக்கு மக்கள் வரிப்பணம் எதற்காகச் செலவிடப்படுகிறது? காவல்துறையின் தலைவரின் இந்தத் தன்னிச்சையான முடிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மௌனம் காப்பது ஏன்? என திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் (HMO India) உடனடியாகத் தலையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், விதிமீறல்கள் இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி சூர்யா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் தேர்தல் முடிவுகள் வராத நிலையில், விஜய்க்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் புரோட்டோகால் குறித்த திருச்சி சூர்யாவின் இந்தப் பதிவு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.