அர்ச்சகர்கள் என்றால், மன்னிப்புக் கடிதம்… கடைநிலை மருத்துவப் பணியாளர்கள் என்றால், இடைநீக்கம்… இரண்டு பேரும் வாங்கியது லஞ்சமென்றால் அவர்கள் மீதான நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் எதற்கு? என இடும்பாவனம் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் இடும்பாவனம் கார்த்திக் கேள்வி எழுந்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாஸ்க் அணிந்துக் கொண்டு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு நடத்த சென்றிருந்தார். அப்போது அவரை யாரென தெரியாமல் அர்ச்சகர்கள் சிலர் அணுகினராம். விரைவு தரிசனம் செய்ய ரூ 4000 செலவாகும் என்றும் அதை கொடுத்தால் உடனே தரிசனத்திற்கு அழைத்து செல்வதாகவும் கூறினராம்.
இதையடுத்து தான் யாரென்று சொல்லாமல் அமைச்சரும், பணத்தை எப்படி செலுத்த வேண்டும் என கேட்டு, அதற்கு ஒரு ஜிபே எண்ணை அவர்கள் கொடுத்ததும் அதில் ரூ 4000-த்தை அமைச்சர் செலுத்தினார். இதையடுத்து ஆய்வுக்கு வந்தது அமைச்சர் என தெரிந்ததும் அர்ச்சகர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். இதையடுத்து கோயில் நிர்வாக அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், அங்கும் பல முறைகேடுகள் நடந்துள்ளதை ரமேஷ் அறிந்தார்.
இந்நிலையில் முறைகேடு செய்தவர்களிடம் ரமேஷ், மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில், அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், திருச்சி, திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சக்கர நாற்காலி தள்ளுவதற்கு 100, 200 ரூபாய் என பணம்பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்தார். அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
அமைச்சர் ரமேஷின் இன்றைய திருச்செந்தூர் ஆய்வில் VIP தரிசனத்துக்காக அமைச்சரென்று தெரியாது அவரிடமே 4,000 ரூபாய் இலஞ்சம் கேட்டு அர்ச்சகர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அதேசமயம், அந்த அர்ச்சகர்கள் இடைநீக்கம் செய்யப்படாது, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி, எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
கடைநிலை மருத்துவப் பணியாளர்கள் என்றால், இடைநீக்கம். அர்ச்சகர்கள் என்றால், மன்னிப்புக் கடிதம்! இரண்டு பேரும் வாங்கியது லஞ்சமென்றால் அவர்கள் மீதான நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் எதற்கு? எல்லோருக்கும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும். ஏன் அது ஆட்களைப் பொறுத்து மாறுபடுகிறது? என இடும்பாவனம் கார்த்திக் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.