தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட். இவரது மகன் பனையேறும் தொழில் மற்றும் விவசாயம் செய்து வரும் மணிகண்டன். இந்நிலையில் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா காவல்துறையினருடன் மணிகண்டனின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, சட்டவிரோதமாக கள் விற்பனை நடைபெறுவதாக தனக்கு புகார் வந்திருப்பதாகக் கூறி, மணிகண்டன் மற்றும் அவரது தந்தை பெருமாள் சேட் ஆகியோரை அழைத்துக்கொண்டு பனை மரம் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் மரத்தில் இருக்கும் பனையில் என்ன இருக்கிறது என்று கூறி, மேலே ஏறி அதனை எடுக்கச் சொல்லியுள்ளார். அதனால் மணிகண்டன் மரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த மணிகண்டனின் அண்ணன் மகள் 17 வயதான சிறுமியிடம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் உடனடியாக கீழே இறங்கி இசக்கி ராஜாவிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது அங்கிருந்த சிறுமியையும் இசக்கி ராஜா கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக மணிகண்டன் இசக்கி ராஜாவைத் தாக்க முயன்றதாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இசக்கி ராஜா காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தனது துப்பாக்கியால் மணிகண்டனை 4 முறை சுட்டுள்ளார். அதில், இரண்டு குண்டுகள் மணிகண்டனின் காலில் பாய்ந்து அங்கேயே சரிந்துள்ளார். அதன்பிறகு காயமடைந்த மணிகண்டன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் இருவரும் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அத்துமீறி நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆலங்குளத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், “யார் இவருக்கு சுடுவதற்கு உத்தரவு கொடுத்தது? ஒரு சிறுமியிடம் தரைகுறைவாக எப்படி பேசலாம்?” என்று பல்வேறு கேள்விகளையும் இசக்கி ராஜாவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். போராட்டம் தீவிரமானதால், ஆலங்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், இசக்கி ராஜா மீது நடவடிக்கை எடுத்தால் தான் போராட்டம் கைவிடப்படும் என்று அப்பகுதி மக்கள் திட்டவட்டமாகக் கூறினர். அதன்பிறகு மணிகண்டன் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.