மனைவியின் டார்ச்சர் தாங்க முடியில ஒன்னு எனக்கு பாதுகாப்பு கொடுங்க… இல்லைன்னா கருணை கொலை செய்து விடுங்கள் என அதிகாரியிடம் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிவபூரி பகுதியிலுள்ள மஹால் சராய் புரணி என்ற இடத்தில் வசித்து வரும் ஷாகீர் கான். இவரது மனைவி பெயர் பர்சானா. திருமணம் ஆன புதிதில் கணவன் – மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் அதன்பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இந்நிலையில், ஷாகீர் கானை, மனைவி பர்சானா வரதட்சணை புகார் செய்து சிறையில் அடைப்பதாக மனைவி பர்சானா தனது குடும்பத்துடன் சேர்ந்து மிரட்ட தொடங்கி உள்ளார். இதனால் ஷாகீர் கான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். அவர் வாழ்வதை விட சாவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். 2 முறை தற்கொலைக்கு முயன்றார். முதல் முறை அவர் விஷம் குடித்தார். அதன்பிறகு அவர் தனது கையின் மணிக்கட்டில் உள்ள ரத்த குழாயை வெட்டி தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் குணமானார்.
அதன்பிறகும் கூட பர்சானாவின் டார்ச்சர் குறையவில்லை. போலியாக வரதட்சணை புகார் செய்வதாக தொடர்ந்து மிரட்டி உள்ளார். இதனால் விரக்தியடைந்த ஷாகீர் கான் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையம் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், பொதுமக்கள் குறைகேட்பு அதிகாரியிடம், ‛தனது உயிருக்கு மனைவி மற்றும் அவரது குடும்பத்தால் ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்” என அந்த மனுவில் ஷாகீர் கான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஷாகீர் கான் அதிகாரியிடம் கூறுகையில், ‛‛நான் எனது வீட்டில் இருப்பதை பாதுகாப்பாக நினைக்கவில்லை. எனது மனைவி மிரட்டல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என் மீது போலியான வரதட்சணை புகார் அளிப்பதாக மனைவி மிரட்டுகிறார். அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும். நான் தற்கொலைக்கு முயற்சித்தேன். ஆனால் காப்பாற்றிவிட்டனர்.
இப்போது என்னை என் மனைவியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் நாட்டில் பல்வேறு குற்றச்சம்பவங்களை பார்க்கிறேன். அதுபோல் என் வாழ்க்கையிலும் நடந்து விடும் என்ற அச்சம் உள்ளது. என் மனைவி என்னை கொன்று டிரம்மில் அடைத்து வைக்கலாம். இல்லாவிட்டால் பாலைவனத்தில் கூட என்னை வீசலாம். இதனால் எனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கருணை கொலை செய்துவிடுங்கள் ” என்று ஷாகீர் கான் அதிகாரியிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார். மனைவி டார்ச்சால் கணவர் தன்னை கருணை கொலை செய்ய மனு கொடுத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பேசும் பொருளாகி உள்ளது.