2026 தேர்தலில் தேமுதிக இருக்கும் கூட்டணியே வெற்றி பெரும். வருகிற ஆட்சி கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. இன்றைக்கு தலைவர் இல்லை என்றாலும் கட்சி முதலிடத்தில் இருப்பதற்கு கடைக்கோடியில் இருக்கும் ஆணிவேரான தொண்டர்களே காரணம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை பிரதான அரசியல்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதி மும்முரமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், 2026 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிய ஆளும் திமுக பல்வேறு கட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மறுபுறம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ‘உள்ளம் தேடி’- இல்லம் நாடி’(வாக்குச் சாவடி நிர்வாகிகளுடனான சந்திப்பு), ‘கேப்டனின் ரத யாத்திரை’–’மக்களை தேடி மக்கள் தலைவர்’ (மக்களுடன் சந்திப்பு) ஆகிய பெயர்களை கொண்ட தமிழகம் முழுவதுமான சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சார பயணம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ” கேப்டன் விஜயகாந்த் தெய்வமாக இருந்து நம்மை வழி நடத்துகிறார். வருகிற 2026 தேர்தல் தேமுதிகவிற்கு மிக மிக முக்கியமான தேர்தல். தேமுதிகவை இப்படியே வைத்து பலன் அனுபவித்து கொண்டு இருக்க முடியாது. இந்த முறை தேமுதிக இருக்கும் கூட்டணியே வெற்றி பெரும். வருகிற ஆட்சி கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. தேமுதிக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆர்வகோளாறு காரணமாக ஒரு கூட்டத்தில் பிரதமர் பிரேமலதா என்று என்னை கூறிவிட்டார்.
தேமுதிக தொண்டர்களுக்கு நான் முதல்வர், துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். எனக்கோ தேமுதிகவில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் நகராட்சி, ஊராட்சி கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி, மந்திரி ஆக வேண்டும் என்று ஆசை. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சாதனை படைக்கும்.
தமிழகத்தில் திமுக அதிமுகவிற்கு அடுத்து தேமுதிக பெரிய கட்சி. தமிழகத்தில் உள்ள 63000 பூத்களில் நிர்வாகிகள் அமைத்துள்ளது. இன்றைக்கு தலைவர் இல்லை என்றாலும் கட்சி முதலிடத்தில் இருப்பதற்கு கடைக்கோடியில் இருக்கும் ஆணிவேரான தொண்டர்களே காரணம். மேலும் இதுவரை 20 ஆண்டுகாலம் தலைவர் முதல் தொண்டன் வரை கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்கள் தேமுதிகவினர். சபரிமலை அய்யப்பனை அன்னதான பிரபு என்றும், அணையாத விளக்கேற்றி அன்னதானம் செய்த வள்ளலார் ஆகியோரை போல வாழ்நாள் முழுவதும் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கியவர் கேப்டன் விஜயகாந்த்.
ஆனால் இன்று உள்ள ஆட்சியாளர்கள் அமைச்சர்கள் கொள்ளை அடித்து கொண்டுள்ளனர். அவர்கள் யாரும் ஒருவருக்கு அன்னதானம் செய்ததில்லை. எம்ஜிஆருக்கு பிறகு மக்களை தங்கத் தட்டில் வைத்து நேசித்தவர் விஜயகாந்த். இன்று கல்வி மருத்துவம் எதுவும் இலவசமில்லை.. ஆனால் தேர்தல் நேரம் வந்தால் வாக்குக்கு காசு கொடுப்பது மட்டும் இலவசம். அதையும் 500 ரூபாய் கொடுத்துவிட்டு கோடி கோடியாய் கொள்ளை அடிக்கிறார்கள். ஆனால் சொந்த உழைப்பில் வேர்வை சிந்தி தொண்டர்கள் சொந்தக்காசை கொடுத்து வைக்கப்பட்ட பேனர்கள் மூலம் தேமுதிகவிற்கு உண்மையான தொண்டர்கள் கிடைத்துள்ளனர் என்பதை உணர்த்தியுள்ளனர்.
திமுக நிறைவேற்றாத திட்டங்களை தேமுதிக கூட்டணி வெற்றி பெற்று அனைத்து பணிகளையும் செய்யும். தொடர்ந்து ஜனவரி 9ம்தேதி கடலூரில் நடக்கும் மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமைய உள்ளது. தமிழகத்தின் டாப் டென் மாநாடு என கூகுளில் தேடிப் பார்த்தால் மதுரையில் கேப்டன் நடத்திய தேமுதிக மாநாடு. அதேபோல முதல் 5 இடங்களும் தேமுதிக மாநாடு தான் இருக்கும். இந்த மாநாட்டின் வெற்றிதான் 2026 தேர்தல் வெற்றியாக அமையும்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.