உத்தர பிரதேசத்தில் வீட்டில் விளையாடிய இரண்டரை வயது குழந்தை மேஜையில் மோதியது. இதில், கண் அருகே வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர் ஒருவர் குழந்தைக்கு காயம்பட்ட இடத்தில் தையல் போடுவதற்கு பதில் ஃபெவிக்விக் (Fevikwik) ஊற்றி பேண்டேஜ் ஒட்டிவிட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டிலுள்ள ஜக்ரிதி விகார் பகுதியில் வசித்து வரும் சர்தார் ஜஸ்பிந்தர் சிங் இவரது மனைவி பெயர் இர்வின் கவுர். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை வீட்டில் வழக்கம்போல் விளையாடி கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த குழந்தையின் தலை மேஜையின் நுனிப்பகுதியில் முட்டியது. இதில் குழந்தையின் கண் அருகே காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.
இதனால் பயந்துபோன குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை அருகே உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அப்போது அங்கிருந்த மருத்துவர் ஃபெவிக்விக் (Fevikwik) வாங்கி வரும்படி கூறியுள்ளார். குழந்தையின் தந்தை வாங்கி கொடுத்த நிலையில் அதனை காயத்தில் ஊற்றி அதன்மேல் பேண்டேஜ் ஒட்டி அனுப்பி உள்ளார். குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும்போது அந்த மருத்துவர், ‛‛சிகிச்சையால் குழந்தை அழுகிறது. வீட்டுக்கு சென்றவுடன் அமைதியாகிவிடும்” என்று கூறி அனுப்பி உள்ளார். ஆனால் வீட்டுக்கு சென்றும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இரவு முழுவதும் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. இதனால் மறுநாள் காலையில் குழந்தையை அவர்கள் வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அந்த மருத்துவமனையில் மருத்துவர், குழந்தையின் கண் அருகே ஒட்டப்பட்டு இருந்த பேண்டேஜை அகற்ற முயன்றனர். ஆனால் மருத்துவரால் அதனை எடுக்க முடியவில்லை. 3 மணிநேரம் போராடி அதனை அகற்றினர். அப்போது தான் குழந்தையின் காயத்துக்கு தையல் போடுவதற்கு பதில் அந்த மருத்துவர் டாக்டர் ஃபெவிக்விக்கை (Fevikwik) ஊற்றி பேண்டேஜ் ஒட்டி அனுப்பி உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவர்கள் அந்த காயத்தை சுற்றிய இடத்தை சுத்தம் கொண்டு 4 தையல்கள் போட்டனர். இதற்கிடையே தான் சம்பவம் குறித்து குழந்தையின் குடும்பத்தினர் சுகாதாரத்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.