இன்று பலர் தமிழ்நாட்டை ஆளப்போகிறோம் என கனவு கண்டு அரசியல் செய்கிறார்கள். நடிகைகளை கட்டிப்பிடித்து ஆடிபணம் சம்பாதித்து விட்டு இன்று நான்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என மார்தட்டுகிறார்கள் என வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தெரிவித்தார்.
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர், சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வருகை தந்தார். அந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கலந்துகொண்டார். அப்போது, முத்துலட்சுமி, தனது கணவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், தமிழக அரசு மணிமண்டபம் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை முதலமைச்சரிடம் வலியுறுத்துங்கள் என கேட்க முத்துலட்சுமியின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய முத்துலட்சுமி, “இன்று பலர் தமிழ்நாட்டை ஆளப்போகிறோம் என கனவு கண்டு அரசியல் செய்கிறார்கள். நடிகைகளை கட்டிப்பிடித்து ஆடிபணம் சம்பாதித்து விட்டு இன்று நான்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என மார்தட்டுகிறார்கள். அவர்களுக்கு நாம் இடமளிக்க கூடாது. தமிழகத்திற்கு வட மாநிலத்தவர்கள் அதிகம் வந்து தமிழர்களின் வேலை வாய்ப்பை பறித்து வருகிறார்கள்.
இதனால் தமிழர்கள் வேலை வாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் நிலைமை உருவாகிவருகிறது. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் எப்படி தமிழர்களை அழித்து சிங்களர்கள் ஆட்சி செய்கிறார்களோ, அதுபோல மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை அழித்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய நினைக்கிறது” என வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தெரிவித்தார்.