கனிமொழி அமித் ஷா வீட்டில் தான் அதிமுக அலுவலகம் உள்ளது என்று சொல்கிறார். அந்த அம்மா கனவில் இருக்குது போல.. அதிமுக அலுவலகம் சென்னையில் தான் இருக்கிறது. நீங்கள் சென்னை சென்று கூட பாருங்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு நீலகிரிக்கு என்று எதாவது செய்தாரா… பெரிய திட்டம் கொண்டு வந்து நன்மை செய்தாரா?.. அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தோம். 400 கோடி ரூபாயில் சிறப்பாக கட்டிக் கொடுத்தோம். நவீன வசதியுடன் கூடிய மருத்துவமனைக்கு நாங்கள் பாதி கட்டடம் கட்டி முடித்தோம், எங்கள் ஆட்சி முடிந்ததால் திமுக அரசு அதை திறந்துவைத்தது. நாங்கள் பெற்ற பிள்ளைக்கு அவர்கள் பெயர் வைத்துவிட்டார்கள். தினம் தினம் ஒரு திட்டத்துக்குப் பெயர் வைப்பார்.. போட்டோ ஷூட் நடத்துவார்.. அதோடு எல்லாம் முடிந்துவிடும்.
இப்படித்தான் 52 திட்டம் அறிவித்து 52 குழு போட்டார்.. தற்போது அந்த குழு என்னாச்சு? அதற்கு வெள்ளை அறிக்கை கேட்டால் கொடுக்க மாட்டார்கள்… திமுக – காங்கிரஸ் இடையே சண்டை மூண்டுவிட்டது… நெல்லையில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது… அதில் காங்கிரஸ் தமிழ்நாட்டின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சொல்கிறார், “வரும் சட்டசபை தேர்தலில் பாதிக்குப் பாதி அதாவது 117 சீட் வேண்டும்” என்று தெளிவாக பேசுகிறார். ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் பேசுகிறார்.

இதேபோல் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ்குமார், ‘தேர்தலில் திமுக வெற்றி பெறாது, அப்படி வெற்றி பெற்றால் எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்’ என்று சொல்கிறார். ஆக கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுவிட்டது… ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டுவிட்டது… திமுக கூடாரம் காலியாகப்போகிறது… எவ்வளவு நாட்களுக்கு தான் இவர்களே கொள்ளையடித்துக் கொண்டு இருப்பார்கள்..? பார்த்துப் பார்த்து சலித்து போய்விட்டது என்பதால், காங்கிரஸ் கட்சி தற்போது விழித்துக்கொண்டு கூடுதல் இடம் மற்றும் ஆட்சியில் பங்கு கேட்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி கூட இப்படி பேட்டி கொடுத்துள்ளார், அதில் என்ன தப்பு இருக்கிறது?..
60 ஆண்டு காலமாக ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அந்த கட்சியின் சாற்றை அவர்கள் (திமுகவினர்) குடித்துவிடுகிறார்கள். அதாவது கரும்பு சாற்றைக் கூட்டணித் தலைமை குடித்துவிடுதாம்… சக்கை தான் காங்கிரஸுக்கு கிடைக்கிறதாம்… பரவாயில்லை… இப்போதாவது அவர்களுக்கு (காங்கிரஸ்) ஞானோதயம் வந்ததே… இதன் மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்பது மிக தெளிவாக தெரிகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அமித் ஷா வீட்டில் தான் அதிமுக அலுவலகம் உள்ளது என்று சொல்கிறார் கனிமொழி.. அந்த அம்மா கனவில் இருக்குது போல.. அதிமுக அலுவலகம் சென்னையில் தான் இருக்கிறது. நீங்கள் சென்னை சென்று கூட பாருங்கள்.. அதிமுக கட்டடத்தை நொறுக்கி பார்த்தீர்கள்.. அதிமுகவை பிளக்க சதி செய்தீர்கள்.. ஆனால் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதிமுக தொண்டர்களால் நிறைந்த கட்சி.. நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும், ஸ்டாலின் அவர்களால் அதிமுகவை அசைத்து கூட பார்க்க முடியாது. எவ்வளவோ சோதனைகளை அதிமுகவுக்கு ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். அனைத்தும் தொண்டர்களால் தவிடு பொடி ஆக்கி வருகிறோம்.
இதே நேரத்தில் திமுகவுக்கு ஒரு சோதனை வந்த போது உங்களுடைய கட்சி அலுவலகத்தை திமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கைப்பற்ற நினைத்தபோது அதனை காப்பாற்றி கொடுத்தது ஜெயலலிதா என்பதை மறந்துவிடாதீர்கள்.. திமுக இரண்டாக போச்சு.. இரண்டாக பிளந்து கிடந்தது.. கருணாநிதி தடுமாறிக்கொண்டு இருந்தார். அப்போது அதில் பிரிந்து சென்றவர்கள் திமுகவை கைப்பற்ற நினைத்தனர். அந்த நேரத்தில் திமுகவை காப்பாற்றி கொடுத்தது தான் அதிமுக கட்சி. அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. அதிமுக கட்சி மற்றவங்களுக்கு உதவும் கட்சி. இப்போது மட்டுமல்ல எப்போதும் மற்றவங்களுக்கு உதவுகின்ற கட்சி. ஆனால் திமுக அப்படியில்லை.. கூட்டணி கட்சிகளுக்கு கூட எதுவும் செய்தது இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசினார்.