தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியிருந்தது. கன்னியாகுமரியை சேர்ந்த சிறுவன் தனது பெற்றோருடன், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
கோடை விடுமுறை என்பதால் சிறுவனை விட்டுவிட்டு பெற்றோர் சொந்த ஊர் திரும்பியிருக்கின்றனர். இப்படி இருக்கையில், சிறுவனின் உறவினர், தனது நண்பரான வடபழனி காவல் நிலைய தலைமைக் காவலர் வேலப்பனை இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு அழைத்திருக்கிறார். இருவரும் வீட்டில் குடித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் உறவினரும், சிறுவனும் தூங்கிவிடவே, வேலப்பன் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை எழுப்பி வலுக்கட்டாயமாக வாயில் மது ஊற்றியிருக்கிறார்.
பின்னர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன், வேலப்பனை டிவி ரிமோட்டால் தாக்கிவிட்டு, வீட்டை வெளியில் பூட்டிக்கொண்டு நடந்தே அசோக் நகர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தலைமைக் காவலர் வேலப்பனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சிறுவனுக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்டது உண்மை என தெரிய வந்தது.
இதனையடுத்து வேலப்பன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வேலப்பன் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, இன்று அவர் பணி நீக்கம் செய்யப்படுவதாக காவல் ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.