திருச்சியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பெண்களிடம் நட்பு ஏற்படுத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பெண்ணின் ஐடியிலிருந்து நட்பு ரீதியான செய்திகள் வந்த பின்னர் அது காதல் உரையாடலாக மாறியது. நீண்ட நாட்கள் போனில் பேசிய பிறகு, இருவரும் நேரில் சந்தித்து உறவை மேம்படுத்த முடிவு செய்தனர்.
மூன்று இளைஞர்களும் மூன்று பெண்களும் சந்திக்க ஒருங்கிணைந்த இடம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தால் யாருக்கும் சந்தேகம் வராது, சாமி தரிசனம் செய்து காதலையும் வளர்த்துக் கொள்ளலாம்” என பெண்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்படி, இளைஞர்கள் சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை ஒன்றை பதிவு செய்தனர்.
ஆனால், அறைக்குள் நுழைந்ததும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சாட்டில் பேசிய இளம் பெண்கள் என்று எதிர்பார்த்த இடத்தில் 30 முதல் 47 வயது வரையிலான மூன்று பெண்கள் இருந்தனர். அதிர்ச்சியடைந்த இளைஞர்களை அந்தப் பெண்கள் சமாதானப்படுத்தினர். “நாங்கள் சிங்கிள் தான், இந்த காலத்துல வயசா பிரச்சனை, கண்டிப்பாக உங்களை கல்யாணம் செய்து கொள்வோம்” எனக் கூறி நம்ப வைத்தனர். மேலும், “காதலுக்கு வயசுக்கு தடை இல்லை கண்ணா?” என மேற்கோள் காட்டி இளைஞர்களை மயக்கினர். அன்றிரவு திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து அனைவரும் அறையில் தங்கினர்.
பெண்கள் மூவரும் இளைஞர்களுக்கு மயக்க மருந்து கலந்த டீ கொடுத்தனர். அதில் தூங்கிய இளைஞர்கள் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களது கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின்கள், கை வளையல்கள், பாக்கெட்டில் இருந்த செல்போன்கள் உள்ளிட்ட மொத்தம் 7 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் அனைத்தும் காணாமல் போயிருந்தன. மூன்று பெண்களும் தப்பி ஓடிவிட்டனர்.
காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இதில், மதுரையைச் சேர்ந்த முத்துலட்சுமி மற்றும் சந்திரா, சிவகாசியைச் சேர்ந்த சுந்தரி தேவி ஆகிய மூவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மூன்று பெண்களும் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் இதே முறையில் செயல்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இளம் வாலிபர்களை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மூலம் காதல் என்ற பெயரில் ஈர்த்து, கோவில் அல்லது ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடிப்பது இவர்களின் வாடிக்கை முறையாக இருந்துள்ளது. இந்த சம்பவம் இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.