நான் தொடங்கவுள்ள இது நம்ம இயக்கம் (https://wetheleader.org/) தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் கட்சியாக போட்டியிடும். சிறந்த மூளைகளை அரசியலுக்கு கொண்டு வருவேன். அதற்கு சிறிது காலம் அவகாசம் தேவை. தமிழகத்தின் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும் என அண்ணாமலை குப்புசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை குப்புசாமி கூறுகையில், பாஜகவில் ஆகஸ்ட் 2020 டெல்லியில் இணைந்தேன். தமிழகத்தில் தமிழக மக்களுக்காக 6 ஆண்டுகாலம் பணியாற்றினேன். இதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். எந்த இடத்தில் இணைந்தோனோ அதே இடத்தில் இருந்து மரியாதையோடு பண்போடு அன்போடு எனது பாதை வேறு , இலக்குகள் பெரியதாக இருக்கிறது, நிறைய மக்களை இணைத்து செயல்பட வேண்டும், ஒரு புதிய அரசியலை அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பண்போடு பாஜக தலைமையிடம் சொல்லிவிட்டு அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன்.

இது தமிழர் பண்பு என வைத்துக் கொள்ளலாம். வெளியே சென்றாலும் மரியாதையுடன் சொல்லிவிட்டு செல்வது நமது பண்பு. இன்று முதல் புதிய இயக்கம் , புதிய பாதையில் புதிய அரசியல் இயக்கத்தில் பயணிக்க போகிறேன். அடிப்படையில் இருந்து ஒரு புதிய பரிமாணத்தோடு பார்வையோடு பார்க்கக் கூடிய விதத்தில்தான் நாம் புதிய கட்சியை தொடங்கியுள்ளோம்.
எல்லோரும் சேர்ந்து இணைந்து அந்த இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது பெரிய ஆசை! அதற்கு முன் சில விஷயங்களை உங்களிடம் சொல்ல வேண்டும். எனது அரசியல் பாதை வளைந்து நெளிந்து உங்கள் முன் நிற்கிறேன். எதுவும் எளிதான பாதை அல்ல! கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து அரசியலுக்கு வந்துள்ளேன்.
2009 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் 3 மாதம் இன்டர்ன்ஷிப் பயின்றேன். அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து பாஜகவில் என் பயணம் ஆரம்பித்து 6 ஆண்டுகள் அக்கட்சியில் இருந்து இன்று தனித்துவமாக நம் இயக்கத்தை மக்கள் முன்னாடி வைக்க வேண்டும் என்று வந்துள்ளேன். 25 வயதில் விஜயகாந்திடம் அரசியல் பயின்றேன். புதிய அரசியலை தமிழகத்தில் கொண்டு வர முடியுமா என்ற யோசித்த தருணம் அது! இன்று எனக்கு வயது 42! கிட்டதட்ட 17 ஆண்டுகளாக புதிய பாதையை உருவாக்க முடியுமா என போராடி வருகிறேன்.

ஒரு better politics, better society கொண்டு வர முடியுமா என போராடி வருகிறேன். அதே வேளையில் நிறைய யூகங்கள், நிறைய பேர் நிறைய சொல்வதால் இதே டெல்லியில் ஆகஸ்ட் மாதம் 2020 இல் பாஜகவில் இணைவதற்கு ஒரு நாள் முன்பு, ரஜினிகாந்த் எனக்கு போன் செய்தார். எனக்கும் அவருக்கும் நட்பு, நான் ஐபிஎஸ் பதவியில் இருந்து வந்ததிலிருந்தே இருக்கிறது. அவருடன் நிறைய பேசியிருக்கிறேன்.
அவரது அரசியல் பாதை எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறேன். நான் டெல்லியில் பாஜகவில் இணைய சென்ற போது ரஜினி போனில் என்னை தொடர்பு கொண்டு அவர் தொடங்கவிருக்கும் இயக்கத்தில் நான் இணைய வேண்டும் என கேட்டார். அப்போது என் கண் முன்பு 3 விஷயங்கள் இருந்தன.
அதாவது தமிழகத்திற்கு எது நல்லது , ரஜினி அரசியலுக்கு வருவதுதான் தமிழகத்திற்கு நல்லது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ரஜினிக்கு எது நல்லது, அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது. கொரோனா காலகட்டத்தில் அவருக்கு இருந்த உடல் பிரச்சினைகளை பார்த்து அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.
அண்ணாமலைக்கு எது நல்லது, பாஜகவில் இணைகிறேன் என்ற வாக்குறுதியை , பி.எல். சந்தோஷிடம் கொடுத்திருந்தேன். அதை மீற கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அப்போது நான் ரஜினியிடம் என் நிலையை கூறி வர முடியாததற்கு மன்னித்துவிடுங்கள் என்றேன்.
18 மாதங்களாக கட்சி தலைமை நான் சொல்வதை காது கொடுத்து கேட்கவில்லை. பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என விரும்பினேன். ஆனால் எனது பார்வையும் கட்சியின் பார்வையும் பொதுவாக ஒத்துபோவதில்லை. நான் எனது பணியை தொடர எனக்கு கட்சியில் இருந்தும் வெளியில் இருந்தும் தடைகள் வந்தன.
எதிர் காலத்தை நோக்கி பயணப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் கட்சியில் இருந்து விலக போவதை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதியே கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்திவிட்டேன். ஆனால் அவர்கள் சட்டசபை தேர்தல் முடியும் வரை தொடருமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் நான் பாஜகவில் தொடர்ந்தேன். மே மாதம் இறுதி வரை தொடர விரும்பி தற்போது விலகிவிட்டேன். ஒரு புதிய அரசியலை.. அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் பாஜகவில் இருந்து வெளியே வருகிறேன்.
நான் தொடங்கவுள்ள (இது நம்ம இயக்கம்) https://wetheleader.org/ தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் கட்சியாக போட்டியிடும். சிறந்த மூளைகளை அரசியலுக்கு கொண்டு வருவேன். அதற்கு சிறிது காலம் அவகாசம் தேவை. தமிழகத்தின் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும் . சமரசமில்லாத கொள்கை கொண்ட இயக்கமாக வழிநடத்துவதே என் இலக்கு. எனது கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏ என்பது கிடையாது. முதலில் அதை முறியடிக்க வேண்டும். நிறைய இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அண்ணாமலை குப்புசாமி தெரிவித்தார்.