அமெரிக்காவின் 47-வது அதிபராக இரண்டாவது முறை டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு ஜனவரி 20 -ந் தேதி பதவியேற்றது முதலே மண்ணின் மைந்தர் கொள்கையை கடைபிடிக்கிறார். அத்துடன் அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள வர்த்தக பற்றாக்குறையை கண்டுபிடித்து அந்த நாடுகளுக்கு அதிக வரி விதிக்கிறார். இதற்காக அமெரிக்கா முதலில் என்ற கடுமையான கொள்கையை கடைபிடிக்கிறார். அமெரிக்காவிற்கு சலுகை தராத நாடுகளை குறிவைத்து பரஸ்பர வரி விதித்தார்.
இதன் ஒரு பகுதியாக இந்திய இறக்குமதிகள் மீது சுங்கவரிகளை விதித்தது. ஜூலை 30 அன்று 25% சுங்கவரி அறிவிக்கப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் காரணமாய், ஆகஸ்ட் 6 அன்று மேலும் 25% வரி விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 27 முதல் அமலான இந்த மொத்த 50% வரி, ஆடை, ஆபரணங்கள், காலணிகள், ரசாயனப் பொருள்கள் உள்ளிட்ட இந்திய ஏற்றுமதிகளைப் பாதித்தது.
இந்த வரி விதிப்பால் இந்திய சிறு வணிகர்களும் ஏற்றுமதியாளர்களும் தடுமாறினர். அடுத்துவரும் 12 மாதங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.6-0.8% குறையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். செப்டம்பர்-அக்டோபர் காலகட்டத்தில், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகள் (மே-அக்டோபர்) 28.5% சரிந்தன.
பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு உதவ, நவம்பர் 12 அன்று இந்திய அரசு ₹5.1 பில்லியன் நிவாரணத் தொகுப்பை அறிவித்தது. நவம்பர் 14 அன்று ரிசர்வ் வங்கி, செப்டம்பர்-டிசம்பர் 2025-ல் செலுத்த வேண்டிய சில காலக் கடன்களுக்கு சலுகைகளை வழங்கியது. ஜவுளி, ரத்தினம், காலணிகள், தோல் போன்ற தொழிலாளர் மிகுந்த இந்தியத் துறைகள் இந்த 50% வரியால் பெரும் தாக்கத்தைச் சந்தித்தன.
இந்த வரிவிதிப்பு, அமெரிக்க-இந்திய பொருளாதார உறவுகளில் பல பத்தாண்டுகளில் இல்லாத பெரும் பின்னடைவைக் குறிக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி மாதிரிக்கு இது சவாலானது. வர்த்தகக் கட்டமைப்பின் பலவீனத்தை உணர்த்திய இந்த நெருக்கடி, மாற்று ஏற்றுமதி சந்தைகளை நாடவும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தவும், ஒற்றைச் சந்தை சார்புநிலையைக் குறைக்கவும் இந்தியாவைத் தூண்டியுள்ளது.
அக்டோபர் 20-ல், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா கொள்முதலை நிறுத்தும் வரை மிகப்பெரிய சுங்க வரிகள் தொடரும் என பகிரங்கமாக அறிவித்தார். செப்டம்பர் 2025-ல் புதிய H-1B விசா விண்ணப்பக் கட்டணம் 100,000 அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டது. டிசம்பரில், வேலை அங்கீகார ஆவணங்களின் (EAD) செல்லுபடியாகும் காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து 18 மாதங்களாகக் குறைக்கப்பட்டது.
இவை இந்திய திறமையான தொழிலாளர்கள் மற்றும் கிரீன்கார்டுக்காகக் காத்திருக்கும் புலம்பெயர்ந்தோரை பெரிதும் பாதித்தன. 2025 பிற்பகுதியில், H-1B விசா விண்ணப்பதாரர்களுக்குக் கடுமையான ஆய்வு நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. சுயவிவரம், பணி அனுபவம், சமூக ஊடகப் பக்கங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. உள்ளடக்கச் சரிபார்ப்பில் ஈடுபடுபவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படலாம் என்ற அறிவிப்பு இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பெரும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது.
இந்த 50% சுங்க வரியால், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டது. ஐந்து மாதங்களில் 28.5% குறைந்தது. ஜவுளி, ரத்தினங்கள், தோல் பொருட்கள், காலணிகள் மற்றும் சிறு உற்பத்தித் துறைகள் போன்ற உழைப்பு-சார்ந்த துறைகள் வருவாய் இழப்புடன் வேலை இழப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டன.
விசா மற்றும் குடியேற்ற தொடர்பான இம்மாற்றங்கள், அமெரிக்காவில் உள்ள இந்திய நிபுணர்கள், மாணவர்கள், குடியேறியோருக்கு பெரும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தின. உயர்த்தப்பட்ட H-1B கட்டணம் மற்றும் கடுமையான அம்சங்கள் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களையும், அமெரிக்காவிற்கு திறமையாளர்களை அனுப்பும் நிறுவனங்களையும் கலங்கடித்தன. பலர் அமெரிக்க வேலைவாய்ப்புகளைக் குறைப்பது அல்லது கைவிடுவது குறித்து யோசிக்க தொடங்கியுள்ளனர்.
வருடம் முழுக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை எதிர்த்த நிலையில் வருட கடைசியில் இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள பயணம் மேற்கு உலகத்தை பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இது ஒரு சாதாரண பயணத்தை விடவும், ராஜதந்திர நிகழ்வை விடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை எந்த ஒரு தரப்பிற்கும் அடிபணியாது என்பதை அமெரிக்காவிற்குச் சத்தமாக நினைவூட்டுவது போல இது அமைந்துள்ளது. முக்கியமாக இந்தியா – ரஷ்யா உறவை முறிக்கும் விதமாக டொனால்ட் டிரம்ப் தீவிரமாக முயற்சிகளை எடுத்த நிலையில், அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக மோடி – விளாடிமிர் புடின் நெருக்கமாகி உள்ளனர்.
சர்வதேச நெருக்கடிக் காலங்களில் மலிவான கச்சா எண்ணெய் விநியோகம் முதல், எஸ்-400, எஸ்-500 போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள் வரை பல உதவிகளை செய்திக்கு ரஷ்யா இந்தியாவுக்குப் பக்கபலமாக இருந்துள்ளது. அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக இந்தியா – ரஷ்யா நெருக்கமாக உள்ளது. மாஸ்கோ இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர் ஆதரவு தருகிறது. இந்த ஒத்துழைப்பு இந்தியாவுக்கு பில்லியன் கணக்கான டாலர்களைச் சேமித்ததுடன் சர்வதேச அரசியல் ரீதியாக பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது.
மறுபுறம், வாஷிங்டன் எப்போதும் நம்பகமான நண்பனாக இருந்ததில்லை. டொனால்ட் டிரம்ப் அதிபராக இந்தியாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறார். அவரது கடுமையான கருத்துகள், வர்த்தகப் மோதல்கள், அதிக வரி விதிப்புக் கோரிக்கைகள், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்த அழுத்தங்களும் இந்தியா அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அமைப்புகள் மாஸ்கோவுடன் உறவுகளைக் குறைக்குமாறு இந்தியாவை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இப்படிப்பட்ட நிலையில்தான் விளாடிமிர் புடின் உடன் மோடி நெருக்கமாகி உள்ளார். CIA போன்ற அமெரிக்க உளவு நிறுவனங்கள் இந்த வருகையை தீவிரமாக் கவனிப்பதாகப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.