என்னுடைய தாய், தந்தை இருவருமே பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் மூலமாக திருமணம் செய்து கொண்டவர்கள். சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதை, இந்த கொள்கைகளோடு பயணம் செய்து கொண்டு இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தில், என்னுடைய அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். ஆகையால் அந்த வீடியோவில் வருவது நான் கிடையாது என இன்ஸ்டா புகழ் திமுக உறுப்பினர் வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தில் நிர்வாகியாக இருந்த கோவையைச் சேர்ந்த இன்ஸ்டா புகழ் வைஷ்ணவி, அண்மையில் தவெகவின் மீது பல குற்றசாட்டுகளை அடுக்கி அந்த கட்சியில் இருந்து விலகி, அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதன்பிறகு திமுகவிற்கு ஆதரவாகவும், தவெகவிற்கு எதிராகவும் கருத்துக்களை வைஷ்ணவி வெளியிட்டு வருகிறார்.
கோயம்புத்தூரை சேர்ந்த இன்ஸ்டா புகழ் திமுக உறுப்பினர் வைஷ்ணவிக்கு எதிராக தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த வைஷ்ணவி,அண்மையில் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெகவினர் மிகவும் அருவறுக்கத்தக்க வகையில் விமர்சிப்பதாக குற்றம்சாட்டி புகார் அளித்தார்.
இந்நிலையில், இன்ஸ்டா புகழ் திமுக உறுப்பினர் வைஷ்ணவி குறித்து தனது எக்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் சாதி ஆதரவு நிலைப்பாட்டுடன் இருப்பதுபோல் பரவியது. இந்நிலையில் அந்த வீடியோவில் வருவது தான் அல்ல என்று வைஷ்ணவி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வைஷ்ணவி வெளியிட்ட வீடியோவில் கூறுகையில், ” எல்லாருக்கும் வணக்கம், சமீப காலமாக இந்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவிக் கொண்டு இருக்கிறது. இந்த வீடியோவில் வருவது நான் கிடையாது.. சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதை,இந்த கொள்கைகளோடு பயணம் செய்து கொண்டு இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தில், என்னுடைய அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.
பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் என்று சொல்லக்கூடிய தவெக தலைவர் விஜய் அவர்கள், திருநெல்வேலியில் நடந்த ஆணவக் கொலைக்கு எதிராக ஒரு துண்டு அறிக்கை கூட வெளியிடவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.. தனக்கு தன்னோட கட்சி மாநாடு மட்டும் தான் முக்கியம் என்ற நோக்கத்துடன் அரசியல் பயணம் செய்கிறார்.
எங்கே இதை எதிர்த்து நான் கேள்வி கேட்பேனோ என்ற ஒரே காரணத்திற்காக, வேண்டுமென்றே என் மீது ஜாதி சாயத்தை சில விஷக்கிருமிகள் சமூக வலைதளத்தில் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை இந்த பூமியில் இருப்பது இரண்டே இரண்டு ஜாதி தான்.. ஒன்று ஆண், இன்னொன்று பெண்.. இன்னொரு விஷயத்தையும் இந்த வீடியோவில் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
என்னுடைய தாய், தந்தை இருவருமே பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் மூலமாக திருமணம் செய்து கொண்டவர்கள் தான். இப்போது பரவி வரும் வீடியோவில் பார்த்தீர்கள் என்றாலே, என்னுடைய குரலுக்கும், அந்த பெண்ணோட குரலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். எனவே அந்த வீடியோவில் பேசுவது நான் இல்லை.. ” என வைஷ்ணவி வீடியோவில் தெரிவித்துள்ளார்.