செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் மற்றும் இளம் செவிலியரை மிரட்டியதாக அவரது மனைவி உள்ளிட்ட 4 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகியுள்ள மருத்துவரை காவல்துறை தேடி வருகின்றனர்.

பழனியைச் சேர்ந்த இளம் செவிலியர் ஒருவர் திண்டுக்கல் சாலையில் அமைந்திள்ள ராஜ் பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியருக்கு மருத்துவமனையின் உரிமையாளரும் மருத்துவருமான ஆயக்குடியைச் சேர்ந்த மதனகோபாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இது மருத்துவர் மதனகோபாலின் மனைவிக்கு தெரியவர இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார்.

மேலும் இனி இளம் செவிலியரை மருத்துவமனைக்கு வேலைக்கு வரவேண்டாம் என மருத்துவரின் மனைவி இளம் செவிலியரை சொல்லியுள்ளார். ஒரு சில நாட்கள் அமைதியாக இருந்த மருத்துவர் மதனகோபால் மற்றும் இளம் செவிலியர் இருவரும் செல்போனில் ஆபாசமாக குறுஞ்செய்திகளை பகிர்வதுமாக இருந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவரின் மனைவி மற்றும் உறவினர்கள் இளம் செவிலியர் குடும்பத்தாரை அழைத்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். அதன்பின்னர் சில நாட்கள் அமைதியாக இருந்த மருத்துவர் மீண்டும் இளம் செவிலியரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு கொடுக்க துவங்கி உள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த இளம் செவிலியர் பழனி நகர காவல் நிலையத்தில் மருத்துவர் அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் பேசிய ஆடியோக்களை சமர்பித்து புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற நகர காவல் துறை ஆய்வாளர் மணிமாறன், பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் மீதும், செவிலியரை மிரட்டியதாக அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த மருத்துவர் தலைமறைவான சம்பவம் பழனி சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *