உலகத்தில் தந்தையை வேவு பார்த்த, உளவு பார்த்த பிள்ளை இருக்கிறார் என்றால் அது அன்புமணி தான் என பாமக நிறுவுனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மகள் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “ஆகஸ்ட் 17-ஆம் தேதி பொதுக்குழு கூடுவதற்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தேன். என்னால் செயல் தலைவர் என்று சொல்லப்பட்ட அன்புமணி ஒன்பதாம் தேதி பொதுக்குழுவை கூட்டியுள்ளார். இது கட்சி விதிகளுக்கு புறம்பானது.
பொதுவாக ஒரு பொதுக்குழு கூட்டப்பட வேண்டும் என்றால் 15 நாட்களுக்கு முன்பு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அதனால் முறையாக 17 -ஆம் தேதி இந்த பொதுக்குழுவை அறிவித்திருக்கிறேன். அதனால் வேறு எவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரிலோ பொதுக்குழு கூட்டுவது சொல்வது கட்சி விதிகளுக்கு புறம்பானது.
எனது வீட்டில் உளவு பார்க்கும் கருவியை வைத்தது அன்புமணி தான், உலகத்தில் தந்தையை வேவு பார்த்த, உளவு பார்த்த பிள்ளை இருக்கிறார் என்றால் அது அன்புமணி தான். இது குறித்து விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கொடுத்துள்ளோம். அதே போன்று சைபர் கிரைம் துறையிடமும் புகார் கொடுத்துள்ளேன்.
அன்புமணி ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யை சொல்கிறார். என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கப் போகிறார்கள் என்று கூட்டத்தில் பேசுகிறார். மாவட்ட செயலாளர்களை எனது வீட்டிற்கு அழைத்தேன். கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று அழைத்தேன். அதிகாலை 3 மணி வரை 100 பேருக்கும் போகாதே என்று தொலைபேசியில் சொல்லி, 100 பேரும் வரவில்லை. நான் நியமித்த மாவட்ட செயலாளர்களில் 8 பேர் தான் வந்தார்கள். அதனால் அந்த 100 பேரையும் நீக்கிவிட்டு கட்சியில் சிறப்பாக செயலாற்றிய மற்றவர்களை மாவட்ட செயலாளராக நியமித்தேன் என ராமதாஸ் தெரிவித்தார்.