நீ உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவனை திருமணம் செய்து பிள்ளையை பெற்றிருக்க, இனி மேல் உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என துணை ஆய்வாளர் சஞ்சீவி மீது குற்றம் சாட்டி பெண் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கீழக்குன்னுப்பட்டியில் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சிவக்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை பெண்ணான கிருத்திகா என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார். சிவகுமார் விவசாயம் செய்து வந்த காரணத்தால் சிவகுமாருக்கும் அவரது பெரியப்பா ஜோதிவேல் என்பவருக்கும் பொது கிணற்றில் நீர் பாய்ச்சுவது சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிணற்றில் இருந்து தனது வயலுக்கு சிவகுமாரின் மனைவி நீர் பாய்ச்சிக் கொண்டு இருக்கும்பொழுது சிவகுமாரின் பெரியப்பா, ஜோதிவேல் கிருத்திகாவிடம் வாக்குவாதம் செய்து தாக்கியுள்ளார். இதனால் துறையூர் அரசு மருத்துவமனையில் கிருத்திகா உள்நோயாளியாக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனவே இது குறித்து துறையூர் காவல் நிலையத்தில் சிவகுமாரின் பெரியப்பா ஜோதிவேல் மீது கிருத்திகா புகார் அளித்து இருந்தார்.

இந்நிலையில், கிருத்திகாவையும், அவரது கணவர் சிவகுமாரையும், விசாரணைக்கு வருமாறு துறையூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் சஞ்சீவி என்பவர் காவல் நிலையத்திற்கு அழைத்து புகார் சம்பந்தமாக விசாரித்துள்ளார். அதன்பின்னர் கிருத்திகாவை தனியாக விசாரிக்க வேண்டும் என தனியாக அழைத்து சென்ற சஞ்சீவி “நீ உனது கணவரை காதல் திருமணம் செய்து 3 குழந்தைகள் பெற்றுள்ளாய், நீ உயர்ந்த ஜாதி தானே தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவனை திருமணம் செய்து பிள்ளையை பெற்றிருக்க, இனி மேல் உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன், நீ என் ஆசைக்கிணங்க வேண்டும்” என கேட்டதாக கூறப்படுகிறது. இல்லை என்றால் உன் மனுவை விசாரிக்காமல் நான் காலதாமதமாக அலைக்கழிப்பேன், என கூறிதாக தெரிகிறது.
இது குறித்து கிருத்திகா தனது கணவர் சிவகுமாரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்க கிருத்திகாவிற்கு தைரியம் சொல்லி சஞ்சீவ் மீது காவல் ஆணையரிடம் மற்றும் மனித உரிமை ஆணையத்திலும் புகாரளித்து உள்ளார். மேலும் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் சுமார் இரண்டு நிமிடத்திற்கு மேல் உதவி ஆய்வாளர் சஞ்சீவி மீது குற்றம் சாட்டி பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.