10000 போடுபவர்களுக்கு 20000 கிடைக்கிறது. 20000 போடுபவர்களுக்கு 40000 கிடைக்கிறது. ஏன் ஒரு லட்சம் போடுபவர்களுக்கு கூட 2 லட்சம் கிடைக்கிறது. ஆனால் கடைசியில் 1.23 கோடியை இழந்த தொழிலதிபர். ஈமு கோழி, ரைஸ் புல்லிங் மற்றும் மண்ணுளிப் பாம்பு போன்ற மக்களை ஏமாற்றும் நபர்களின் உத்திகளை மையமாகக் கொண்ட, சதுரங்க வேட்டை பட பாணியில் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது போல் இன்றைக்கு ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் மோசடிகள் நடக்கிறது. 10000 போடுபவர்களுக்கு 20000 கிடைக்கிறது. 20000 போடுபவர்களுக்கு 40000 கிடைக்கிறது. ஏன் ஒரு லட்சம் போடுபவர்களுக்கு கூட 2 லட்சம் கிடைக்கிறது. அப்படி வாங்கும் 2 லட்சம் பணத்தை பார்த்ததும், வழுக்கி விழுந்து விடுகிறார்கள். மொத்தமாக கோடிகளில் காலியாகி விடுகிறது.
அப்படி ஒரு சம்பவம்தான் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் மகேந்திரன் என்பவருடைய செல்போன் ‘வாட்ஸ் ஆஃப்’ எண்ணுக்கு ஒரு தகவல் வந்திருக்கிறது. அந்த தகவலில், ‘ஆன்லைன்’ வர்த்தகத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதை சோதித்து பார்க்க விரும்பிய மகேந்திரன் முதலில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தார். அதில் அவருக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்து இருக்கிறது.
இதனால் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டு தொடர்ந்து ‘ஆன்லைன்’ வர்த்தகத்தில் ரூ.1.23 கோடி வரை முதலீடு செய்து இருக்கிறார். ஆனால் ஆசைகாட்டி மோசம் செய்தது போல், மோசடி கும்பல் இவர் முதலீடு செய்த ரூ.1.23 கோடியையும் அபகரித்துக் கொண்டார்கள். இதுதொடர்பாக மகேந்திரன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.
இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆன்லைன் மோசடி கும்பலைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர். ஈரோட்டை சேர்ந்த இவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோன்று பல தொழில் அதிபர்களிடம் மோசடி கும்பல் கைவரிசை காட்டி வந்துள்ளது.
அண்மையில் ‘ஆன்லைன்’ வர்த்தகத்தில் ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி கிருஷ்ணகுமார் என்பவர் ரூ.6.58 கோடியை இழந்தார். அவரிடம் மோசடி செய்த கும்பலை சேர்ந்த 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். 10-வது குற்றவாளியாக ஈரோட்டை சேர்ந்த மாதேஷ்குமார் என்பவரும் இப்போது கைது செய்யப்பட்டார். இந்த 2 வழக்குகளிலும் 11 பேர் கைதாகி உள்ளார்கள். ‘ஆன்லைன்’ வர்த்தகத்தை நம்பி தீர விசாரிக்காமல் பொதுமக்கள் கோடிகளையும், லட்சங்களையும் கொட்டி ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.