மகாராஷ்டிராவில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை, 3-வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மகாராஷ்டிராவை ஆளும் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தை போலவே இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5-ந் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், “பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்” என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.