எனது உலகமே அப்பா தான்! அப்பா, அம்மா, தங்கை மட்டும் தான் எனது உலகம். அவர்களை நிச்சயம் நன்றாகப் பார்த்துக் கொள்வேன். அப்பா இனி எதற்கும் கவலைப்படக்கூடாது” என “நான் முதல்வன்” திட்டம் மூலம் பயனடைந்த தென்காசி பிரேமா பேச அங்கிருந்த அனைவரின் கண்ணீர் வழிய தொடங்கியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். இதில் தமிழக அரசுத் திட்டங்கள் எந்தளவுக்குத் தங்களுக்குப் பலன் கொடுத்தது என்பதைப் பகிர்ந்து கொண்டனர்.

அப்படி தென்காசியைச் சேர்ந்த பிரேமா என்ற பெண் “நான் முதல்வன்” திட்டம் தனக்கு எந்தளவுக்குப் பலன் கொடுத்தது என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த பிரேமாவின் நெகிழ்ச்சியான பேச்சைக் கேட்டு அங்கிருந்த அனைவருமே கண்ணீர்விட்டனர். அந்தப் பெண் பேசுகையில், “நான் பிரேமா. தென்காசியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். 12-ஆம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரியில் சேர்ந்தேன். எங்கள் கிராமத்தில் நாங்கள் இருக்கும் வீட்டில் எப்போதும் மழை பெய்தால் தண்ணீர் உள்ளே வரும். கல்லூரியில் படிக்கும்போதும் மழை பெய்தால் எனக்கு வீட்டைப் பற்றியே கவலை இருக்கும். தண்ணீர் வருமே என்ன செய்வார்கள் என்றே யோசிப்பேன்.
என்னைக் கல்லூரியில் சேர்த்தபோதும் கூட பலரும் பெண்ணை படிக்க வைக்க வேண்டாம் என்றே சொன்னார்கள். ஆனால், அதையும் தாண்டி எனது தந்தை என்னைப் படிக்க வைத்தார். 7-வது செமசஸ்டரில் நான் முதல்வன் திட்டத்தில் சிப் தொடர்பாக கோர்ஸை அறிமுகப்படுத்தினர். அது படிக்க ரொம்ப செலவாகும். ஆனால், நான் முதல்வன் திட்டம் மூலம் என்னால் படிக்க முடிந்தது. இதன் மூலம் எனக்கு வேலை கிடைத்துள்ளது.
நான் முதல்வன் திட்டம் இல்லை என்றால் எனது வாழ்க்கை என்ன ஆகியிருக்கும் என்றே தெரியவில்லை. படித்து முடித்துவிட்டு என்ன செய்ய வேண்டும் என்று ஐடியாவே இல்லாமல் இருந்தேன். அப்போது தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. மழை பெய்தாலும் எனது அப்பா, அம்மா நனையாமல் இருக்க ஒரு வீடு கட்ட வேண்டும். அது எங்கள் உழைப்பில் கட்டியதாக இருக்க வேண்டும். எனது தங்கை இப்போது அரசு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவரையும் தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும்.

எனது முதல் மாதச் சம்பளம் இப்போது எனது கையில் இருக்கிறது. அதை இந்த மேடையில் வைத்து எனது அப்பாவுக்குக் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனது அப்பா தான் இது எல்லாவற்றுக்கும் காரணம். இதனால் அப்பாவுக்குக் கொடுக்க ஆசை” என்றார். அதன் பிறகு அவரது தந்தை மேடை ஏறினார். அவரிடம் தனது முதல் மாதச் சம்பளத்தைக் கொடுத்தார். இந்த நெகிழ்ச்சியான காட்சியைப் பார்த்து அங்கிருந்த அனைவருமே கண்ணீர்விட்டனர்.
மேலும் பிரேமா தொடர்ந்து பேசுகையில், “எனக்கு வாழ்க்கையில் யாருமே பெரிதாக சப்போர்ட் செய்ததே இல்லை. ஆனால், எப்போதும் அப்பா மட்டும் உறுதுணையாக இருந்துள்ளார். பள்ளி, கல்லூரி என எதுவாக இருந்தாலும் எனக்கு உறுதுணையாக இருந்தார். படிப்பு தொடர்பாக எதைக் கேட்டாலும் தவறாமல் படிக்க வைத்தார். எனது உலகமே அப்பா தான்! அப்பா, அம்மா, தங்கை மட்டும் தான் எனது உலகம். அவர்களை நிச்சயம் நன்றாகப் பார்த்துக் கொள்வேன். அப்பா இனி எதற்கும் கவலைப்படக்கூடாது” என பிரேமா பேச அங்கிருந்த அனைவரின் கண்ணீர் வழிய தொடங்கியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.