தமிழ்நாடு பாஜக தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஆக இருந்து பின்னர் அங்கிருந்து ஓரங்கப்பட்டு வெளியேறி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஓ.பன்னீர்செல்வம் உருவாக்கினார். பாஜக உடன் கூட்டணி வைத்து கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் தழுவினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் முக்கிய முடிவை எடுத்துள்ளார். ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு முதலமைச்சர் ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்தார்.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், “என்னிடம் கேட்டு இருந்தால் நானே பிரதமரை பார்க்க ஏற்பாடு செய்திருப்பேன். நான் அவரிடம் சட்டமன்றத்தில் பார்க்கும்போதும் சரி, ஏற்கனவே தொலைபேசியில் பேசிக்கொண்டே தான் இருந்தேன். அவரிடம் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டாம் என்பதையும் கேட்டுக்கொணடேன். ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது சொந்த பிரச்சனைக்காக கூட இருக்கலாம். அவர் தரப்பில் இருந்து பிரதமரை சந்திக்க கேட்டால் நிச்சயம் அவருக்கு சந்திப்பை ஏற்பாடுத்தி தருவோம்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் “தன்னிடம் சொல்லியிருந்தால் மாண்புமிகு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடனம்.
நயினார் நாகேந்திரன் அவர்களை ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், நயினார் நாகேந்திரன் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரன் அவர்களிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் நயினார் நாகேந்திரன் அவர்கள் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா. வைத்திலிங்கம் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பாரதப் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.
உண்மையிலேயே, நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பாரதப் பிரதமர் அவர்களை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் கைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம். அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்பவில்லை. இதிலிருந்து நான் பாரதப் பிரதமர் அவர்களை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது.
எனவே, பாரதப் பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரன் அவர்களிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது. நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.” என ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.