அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம். எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஓ. பன்னீர்செல்வம் பாஜக தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பாஜகவுக்கு எதிராக கண்டன அறிக்கையை வெளியிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை கொண்டிருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.
இதனிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை அடையாறு பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உடல்நலம் குறித்து ஓபிஎஸ் கேட்டறிந்ததாக தகவல் வெளியானது. அதன்பின்னர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு இன்று மாலை திடீரென வந்த ஓ.பன்னீர்செல்வம், அவருடன் சந்திப்பு நடத்தினார். ஓ. பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டு வாசல் வரை வந்து வரவேற்றார்.

இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களின் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். “அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம். எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. நான் ஜெயலலிதாவோடு 25 ஆண்டு காலம் நேரடி பார்வையில் பணியாற்றி இருக்கிறேன். அரசியல் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் அனைத்தும் எனக்குத் தெரியும்.
மக்களவையில் சமக்ரா சிக்ஷா நிதி உதவி பற்றி கேள்வி எழுப்பியபோது மத்திய அரசு அதை ஏற்கவில்லை. தமிழகத்துக்கு உரிய நிதி கொடுக்காததால் பாஜக மீது எனக்கு வருத்தம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்யத் தவறினால், அதைக் கண்டறிந்து தினமும் கண்டன அறிக்கை வெளியிட்டு வருகிறேன்” என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.