கேரள அரசு ஐயப்பனை வைத்து பிக்பாக்கெட் அடித்து வருகிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டனில் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள் மனைவி கீதா ராதா அவர்கள் மறைவையொட்டி, ராதிகா சாரத்குமார் அவர்கள் இல்லத்திற்கு நேரில் சந்தித்து கீதா ராதா அவர்கள் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, குடும்பத்தார் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.ன் அதன் பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, நான் டிடிவி தினகரனை சந்தித்து பேசினேன். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. அவரிடம் திமுகவை வீழ்த்த ஓரணியில் திரள வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அவரும் நவம்பர் மாதத்திற்கு பிறகு சொல்வதாக தெரிவித்துள்ளார். எனவே அவர் மீண்டும் கூட்டணியில் இணைவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். அது போல் OPS-யும் சந்தித்து அவரிடமும் அழைப்பு விடுப்பேன். சபரிமலையில் 3 ஆண்டுகளில் 340 கோடி, 360 கோடி, 420 கோடி வருமானம் வந்திருக்கிறது.

இதை கூட்டி கழித்து பார்த்தாலே ரூ 1000 கோடி வருமானம் வந்துள்ள நிலையில் அடுத்த 50 ஆண்டு காலம் சபரிமலை மாஸ்டர் பிளானில் ஐயப்பன் கோயிலை சீரமைக்க ரூ 1000 கோடி ஒதுக்கியிருக்கிறோம் என பினராயி விஜயன் கூறியது வேடிக்கையாக இருக்கிறது. அடுத்த 50 ஆண்டு காலம் ஆயிரம் கோடி எங்கிருக்கிறது? அப்போ கோயிலில் வரும் வருமானத்தை என்ன செய்கிறார்கள்? ஐயப்ப சுவாமியை வைத்து கேரள அரசு பிக்பாக்கெட் அடித்து வருகிறது.
கடவுள் இல்லை என சொல்லக் கூடிய கேரள முதல்வர் பினராயி ஐயப்பனுக்கு எப்படி மாநாடு நடத்த முடியும்? சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிய திமுகவினருக்கு சர்வதேச ஐயப்ப பக்தர்கள் சங்கம் மாநாட்டில் என்ன வேலை? அந்த கூட்டத்தில் போய் சேகர்பாபு சபரிமலையில் 5 ஏக்கர் கொடுங்க என கேட்கிறார். தமிழகத்தில் உள்ள கோயில் ஆக்கிரமிப்புகளுமே நிறைய ஏக்கர் இருக்கும். அதை மீட்டாலே போதும்.

தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து விஜய் பேசியதை நான் வரவேற்கிறேன். விஜய் பேசியது தவறு என்றால் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். ஒரு முதல்வர் வெளிநாட்டுக்கு போனாலே ரூ 100 கோடி ரூ 300 கோடினு ஒதுக்கீடு செய்வாங்களா, இதெல்லாம் ஏற்கெனவே தொழில் தொடங்கியதன் விரிவாக்கமாகத்தான் இருக்கும். அதை முதல்வர், முதலீட்டை ஈர்த்தார் என சொல்லி வருகிறார்கள். தூத்துக்குடி கப்பல் கட்டும் நிறுவனத்திற்கு ரூ 30 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இரு நிறுவனங்களும் மத்திய அரசு நிறுவனங்கள்.

இந்த முதலீடுகளை மத்திய அரசுதான் செய்கிறது என சொல்ல தமிழக அரசுக்கும், தமிழக தொழில் துறை அமைச்சருக்கும் என்ன பிரச்சினை? ரஜினியை நான் மாதம் ஒரு முறை சந்திப்பது வழக்கம். அவர் எனக்கு குரு, ஆன்மீக ரீதியாக அவருடன் எனக்கு ஆத்மார்த்தமான நட்பு உள்ளது. அப்படித்தான் நான் ரஜினியை சந்தித்தேன். இதை அரசியல் ஆக்காதீர்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.