திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் பயோ மைனிங் திட்டத்தின் மூலம் 40 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு குப்பைகளை அகற்றுவதற்கு பதிலாக, துவாக்குடி பகுதியில் கைவிடப்பட்ட 1000 அடி ஆழமுள்ள குவாரிகளில் குப்பைகளை கொட்டி நிரப்பலாம் என அதிகாரிகளுக்கு தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி ஐடியா செல்லூர் ராஜூ ஐடியாவை மிஞ்சுதே என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை நிரந்தரமாக அகற்றுவது குறித்து திருவெறும்பூர் தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 600 டன் குப்பைகள் வந்து இங்கு கொட்டப்படுகிறது. மலைபோல் குவிந்திருக்கும் இந்த குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மாசு, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளால் பொதுமக்கள் பெரும் அவதியுற்று வந்தனர்.
இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே பல போராட்டங்களில் ஈடுபட்டதுடன் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். மேலும் இங்கு பயோ மைனிங் திட்டத்தின் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வந்தாலும் மீண்டும் மீண்டும் குப்பைகள் குவிந்த வண்ணமே உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் குப்பைக்கிடங்கை முற்றிலுமாக இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி அரியமங்கலம் குப்பை கிடங்கில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயோ மைனிங் திட்டத்தின் மூலம் 40 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு குப்பைகளை அகற்றுவதற்கு பதிலாக, துவாக்குடி பகுதியில் கைவிடப்பட்ட 1000 அடி ஆழமுள்ள குவாரிகளில் (பாறை குழிகளில்) குப்பைகளை கொட்டி நிரப்பலாம் என அதிகாரிகளுக்கு ஐடியா கொடுத்துள்ளார்.
மேலும் இதன் மூலம் குவாரிகளும் மூடப்படும், குப்பைகளும் குப்பை கிடங்கில் தேங்காமல் இருக்கும். குப்பைகளை நேரடியாக குவாரியில் கொட்டுவதால் 30 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் எனவும், இதற்கு மாநகராட்சி ஆணையர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
இந்நிலையில் இதுதான் சமூகவலைதளங்களில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. வைகை அணையை தெர்மாகோல் கொண்டு மூடுவதற்கு இணையானது அவரது ஐடியா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மக்கிப்போன குப்பைகளை மறுசுழற்சி செய்யாமல். கல்குவாரி கிடங்குகளில் கொட்டினால் நிலத்தடி நீர் மாசுபட்டு உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்கிற அடிப்படை அறிவு தவெக எம்.எல்.ஏவுக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், அதிமுகவின் செல்லூர் ராஜூவைப் போல இவரது ஐடியா இருக்கிறது என விமர்சிக்கின்றனர்.