தினமலர் மற்றும் தினகரன் நிருபர்களை அறையில் அடைத்து வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய சோளிங்கர் தவெக எம்எல்ஏ தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள ஒரு தியேட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை சோளிங்கர் தவெக எம்எல்ஏ கபில் தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது யூ டியூபர் சிவா என்பவர் தவெக கட்சியினரிடம் படத்தின் ரிவ்யூ கேட்டு கொண்டு இருந்தாராம். அதைப்பார்த்த தவெக எம்எல்ஏ கபில், அந்த யூ டியூபரை தாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவம் செய்தி டிவிகளில் ஒளிபரப்பானதால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அந்த யூ டியூபர் சிவாவை தேடி வந்துள்ளனர். தொடர்ந்து நேற்று முன்தினம் படத்தை திரையிட்ட தியேட்டருக்கு சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது நிருபர்கள், யூ டியூபர்கள் யார்? யார்? வந்தார்கள் என்பது குறித்து ஆய்வு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் சோளிங்கர் அண்ணாசிலை அருகே உள்ள யூ டியூபரின் வீட்டிற்கு எம்எல்ஏ கபில் மற்றும் அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் 10-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது அவர் குளித்துக் கொண்டு இருந்துள்ளார். குளித்து முடித்தவுடன் வெளியே வந்த சிவாவை, வலுக்கட்டயமாக அருகே உள்ள யூ டியூபரின் ஸ்டூடியோ கடைக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கடையின் வெளியே குவிந்தனர். கடையின் வெளியே நடந்த சம்பவங்களை தினமலர் கல்யாணசுந்தரம் மற்றும் தினகரன் நிருபர் அரங்கநாதன், ஆகியோர் செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். இதைப்பார்த்த கபில், அவரது தம்பி தனஞ்செழியன் உட்பட 20-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஆவேசத்துடன் அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகிய இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து அந்த கடையின் உள்ளே தள்ளி ஷட்டரை மூடியுள்ளனர்.
பின்னர் உள்ளே வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் செல்போன்களை பறித்துக் கொண்டு பதிவு செய்த வீடியோக்களை அழிக்குமாறு கூறியுள்ளனர். இவர்களின் அலறல் சத்தும் கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் கடையின் முன்பு குவிந்து கூச்சலிட்டனர் இதற்கிடையில் தகவல் அறிந்த சோளிங்கர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். காவல் உதவி ஆய்வாளர் முனீர் பாஷாவுக்கு எம்எல்ஏ கபில் போன் செய்து வரவழைத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முனீர் பாஷா, ஷட்டரை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது தினகரன் நிருபர் அரங்கநாதன், தினமலர் நிருபர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பதிவு செய்து இருந்த வீடியோக்களை காவல் உதவி ஆய்வாளர் முனீர் பாஷா முன்னிலையில் எம்எல்ஏ கபில் அவரது தம்பி தனஞ்செழியன் ஆகியோர் அழித்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து எம்எல்ஏ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காரில் ஏறி தப்பி சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த அரங்கநாதன், கல்யாண சுந்தரம், சிவா ஆகிய 3 பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்கிடையில் இந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று கூறி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.