டிடிவி தினகரன்: திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை..!

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்பதாக கூறிவிட்டு பின்னர் எதிர்ப்பதும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதும் என திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அமமுக எட்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் அறிவார்ந்த கொள்கைகளையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனிதாபிமானக் கோட்பாடுகளையும் கலங்கரை விளக்கமாகப் பின்பற்றி, தமிழகத்தின் புகழை தரணி எங்கும் பரப்பி தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்களை இத்தருணத்தில் வணங்குகிறேன்.

தனிப்பெரும் ஆளுமையாக திகழ்ந்த மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவத்தை கழகக் கொடியில் ஏந்தியும், இதயதெய்வம் அம்மா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை மனதில் நிலைநிறுத்தியும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடவும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்டிடவும், நாம் அனைவரும் இணைந்து கடந்த 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 -ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் உருவாக்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்களின் அளவில்லா அன்போடும் ஏகோபித்த ஆதரவோடும் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அம்மா அவர்களின் கொள்கைகளையும், லட்சியங்களையும் நிறைவேற்றிடும் வகையில் தொடங்கப்பட்ட நம் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த அன்புச் சகோதரர்களான மேலூர் திரு.R.சாமி, செயல் வீரர் திரு.P. வெற்றிவேல் உள்ளிட்ட பலர் நம்மை விட்டு இயற்கையோடு இயற்கையாக கலந்திருந்தாலும், விசுவாசத்தின் அடையாளமாகத் திகழ்ந்த அவர்களின் எண்ணம் ஈடேறும் நேரமும், காலமும் அருகில் வந்துவிட்டது.

மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்ட இயக்கங்களால் மட்டுமே வலுவான அடித்தளத்தை அமைக்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டிய நம் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருக்கும் இயக்கமாக நம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திகழ்ந்து வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொகுதியான ஆர்.கே நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆண்ட கட்சி மற்றும் ஆளுங்கட்சியை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிபெற்று அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்கள் நாம் தான் என்பதை அன்றே நிரூபித்துக் காட்டினோம். அதன் தொடர்ச்சியாக 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து விதமான தேர்தல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதத்தை பெற்றதோடு உள்ளாட்சி தேர்தல்களில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வாகை சூடி, முக்கிய பொறுப்புகளையும் வென்றுகாட்டினோம்.

நாம் பெற்ற வாக்குகள் ஒவ்வொன்றும் வெறும் வாக்குகள் அல்ல, நம் இயக்கத்திற்கு தமிழக மக்கள் வழங்கிய நற்சான்றுகள். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு, இரும்புப் பெண்மணியாக செயல்பட்டு, தமிழக மக்களின் வாழ்வில் வெளிச்சத்தை தந்த புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் விசுவாசமிக்க உண்மைத் தொண்டர்களைக் கொண்டதுதான் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

நமது இயக்கம் என்பது மக்களுக்கு தொண்டாற்றும் பெருங்கடமையை முன்னேடுத்துச்செல்லும் ஒரு பொது வாழ்கை பயணம் என்ற எண்ணத்தோடு களப்பணியாற்றும் உங்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் அடித்தளத்திலிருந்து பொங்கிவரும் அன்பை என்றென்றும் உறித்தாக்குகிறேன். மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய நீங்கள் அளிக்கும் அன்பு, ஆதரவு, ஊக்கம் மற்றும் உறுதுணை என்ற இந்த பாசப் பிணைப்பை எவராலும், எக்காலத்திலும் பிரிக்க முடியாது என்ற நம்பிக்கை, மிகுந்த உத்வேகத்தையும் அளிக்கிறது.

இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவுக்கு பின் ஆட்சி பீடத்தில் நம்மால் அமரவைக்கப்பட்டவர்கள், நம் புரட்சித்தலைவி அவர்கள் தன் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் கட்டிக் காத்த இயக்கத்தை தங்கள் சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் மூடுவிழா காணும் முயற்சியில் மும்முரமாகவும், முழுமூச்சாகவும் இறங்கியுள்ளனர். எந்த தீயசக்தியை வீழ்த்த புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் போராடினார்களோ அதே தீய சக்திகளுடன் மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு, நம் தலைவர்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் இயக்கத்தை பாதை மாற்றி அழைத்து சென்றுகொண்டிருக்கும் துரோகக் கும்பலை இதயதெய்வம் அம்மா அவர்களின் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

தேர்தலுக்கு முன் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை வாரி வழங்கிய திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில் அதனை நிறைவேற்ற மறுக்கிறது. பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும் இளம் பெண்கள், பெண் காவலர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் தான் தற்போது நிலவுகிறது.

நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கும் நிலையில், குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற தமிழக மக்கள் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். திமுகவின் மீது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பை திசைதிருப்பும் வகையில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்பதாக கூறிவிட்டு பின்னர் எதிர்ப்பதும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதும் என திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை.

சவால்களை எதிர்கொள்வதற்கு உரிய துணிச்சலும், மன உறுதியும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். அத்தகைய துணிச்சல் மற்றும் மன உறுதியோடும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் போராடி வரும் நாம், நமது களப்பணிகளை மேலும் தீவிரப்படுத்திடுவோம். மக்கள் நலனையும், மாநிலத்தின் உரிமையையும் பாதுகாக்கத் தவறிய மக்கள் விரோத திமுக அரசை அடியோடு துடைத்தெறிந்திடும் நோக்கத்தில், திமுக அரசின் அவலங்களை ஒவ்வொரு வாக்காளரிடமும் முன் நிறுத்தி, மக்களை திரட்டி போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்திடுவோம்.

அதே நேரத்தில் மக்கள் விரோத திமுக அரசை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய காலமும் நேரமும் நெருங்கிவிட்டது. நாம் அனைவரும் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து பணியாற்றி மக்கள் விரோத திமுகவை வீழ்த்திடுவோம், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடுவோம்!” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்..!

இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி-ஒன்றிய பாசிச பாஜக அரசுக்கு எதிராக, திருப்பூர் தெற்கு மாவட்டம், உடுமலை மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் உடுமலை மேற்கு ஒன்றியம் தேவனூர் புதூர் அண்ணா திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 12-ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 5-ஆம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டு அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் மோடி அரசின் அநீதியை மக்களிடம் கொண்டு சென்று, அதன் பேராபத்தை எடுத்து கூற வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்பட போகும் மாநிலங்களை ஒன்றிணைத்து ‘கூட்டு நடவடிக்கை குழு”வை அமைத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 7 மாநிலங்களை சேர்ந்த 29 கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தி.மு.க. சார்பில் வரும் 12-ம் தேதி “தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்” ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டங்கள் மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெற உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து நம்மை இரண்டாந்தர குடிமக்களாக்க நினைக்கும் மோடி அரசின் சதியை மக்களிடம் எடுத்து கூறும் விதமாகவும், மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மேற்கொள்வதை மக்களிடம் புரிய வைக்கும் விதமாகவும், மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெறும் விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களில் மாவட்டம், மாநகரம், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டும் என திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் தெற்கு மாவட்டம், உடுமலை மேற்கு ஒன்றியம், திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பாக ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசினைவில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து உடுமலை மேற்கு ஒன்றியம் மடத்துக்குளம் தொகுதி மாபெரும் பொதுக்கூட்டம் உடுமலை மேற்கு ஒன்றியம் தேவனூர் புதூர் அண்ணா திடலில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் க. ஈஸ்வரசாமி, ஜெய ராமகிருஷ்ணன், பத்மநாபன், ஜெயக்குமார், செயலாளர்.தி. செழியன், ஆடி வெள்ளி முரளி, கதிர்வேல், கமலக்கண்ணன், S.N. காணியப்பன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டு பொதுக் கூட்டத்தை சிறப்பித்தார்கள்.

 

செந்தில் பாலாஜி: அண்ணாமலை தம்பி இனி பார்த்து சபதம் எடுங்க…!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுக்கும் போது கொஞ்சம் யோசித்து எடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அட்வைஸ் கொடுத்துள்ளார். கரூர் மாவட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையிலான மோதல் அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலின் போதே தொடங்கிவிட்டது.

ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னரும் ரஃபேல் வாட்ச் விவகாரம், விமானத்தின் எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்ட விவகாரத்தை வைத்து அண்ணாமலையை செந்தில் பாலாஜி சாடினார். அதேபோல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

இந்நிலையில் மீண்டும் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் செய்துள்ளார். கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியில் பெரியார் தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி பேசுகையில், பெரியார் கருத்துகளை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் விரைவில் கோயம்புத்தூரில் பெரியார் மாநாடு நடத்தப்படும்.

பாஜகவினர் ஏதோ ஒரேயொரு தொகுதியில் வென்றுவிட்டதால், கோயம்புத்தூரே அவர்களுக்கு சொந்தம் என்பதை போல் ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்து வருகிறார்கள். கோயம்புத்தூர் எப்போதும் பெரியார் மண், திராவிட மண் என்பதை மக்கள் நிரூபித்துள்ளார்கள். கோயம்புத்தூரில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வென்றுவிட்டதால், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெல்லலாம் என்று நினைத்தார்கள்.

ஆனால் சட்டமன்றத் தேர்தலில் உள்ளூரிலேயே விலை போகாத ஒரு ஆடு.. நாடாமன்றத் தேர்தலில் வெளியூர் சந்தைக்கு வந்து விலை போகுமா என்று வந்தார்கள்.. தம்பி.. இந்த ஊரும் பெரியார் மண்தான்.. உனக்கு அங்கேயும் வேலையில்ல.. இங்கேயும் வேலையில்ல. தமிழ்நாட்டில் இனி எங்கேயும் வேலையில்லை என்று கூறிவிட்டனர். உலகத்திலேயே நான்தான் அறிவாளி என்று நினைத்து கொண்டு, தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்டு.. ஊர் மக்கள் நாட்டு மக்கள் அடிப்பதற்கு முன் நானே என்னை அடித்து கொள்கிறேன் என்று வீடியோ எடுத்து வெளியிட்டார்.

சாட்டையால் அடித்ததோடு மட்டுமல்லாமல், செருப்பு போட மாட்டேன் என்று புது கதையை சொன்னார். சபதம் எடுப்பதில் அட்வைஸ் தம்பி, தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர், வழியில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. இனி வாழ்நாள் முழுக்க உன்னால் செருப்பே போட முடியாது. கொஞ்சம் யோசித்து சபத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மாநிலத் தலைவர் என்ற பதவியை எடுத்துவிட்டால், அதிக நாட்கள் அங்கு இருக்க மாட்டார் என்று சிலர் கூறினார்கள்.

ஆனால் என்னிடம் கேட்டால், அவர் அங்கேயே இருக்க வேண்டும். அதுதான் நல்லது. அரசியலுக்கு வந்துவிட்டால் சில ஆண்டுகளிலேயே உச்சத்தை எட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அந்த பட்டியலில் செருப்பு போடாமல் சாட்டையடித்து கொண்டவரும் இருக்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று உழைத்து இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ விமர்சனம்: சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி திமுக..!

சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரை மாகப்பூபாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பொதுமக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ,” அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உயர்கல்வி நிலையங்கள் அதிகரிப்பால் இடைநிற்றல் இல்லாமல் கல்வியில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கி உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக இஸ்ரோவில் கூட தமிழர்கள் உயர்பதவியில் அலங்கரித்து வந்துள்ளனர் மற்றும் வருகின்றனர். மடிக்கணினி வழங்கி மாணவர்களுக்கு வசதி படைத்து கொடுத்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஜெ., பெண் சிசு பாதுகாவலர் என அன்னை தெரசா பாராட்டினார். கைலி கட்டியவர்கள் தீவிரவாதிகள் என்று கருணாநிதி சொன்னார். அத்தகைய திமுகவிற்கு இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். திமுகவினர் சிறுபான்மையினர் நலனுக்கு கொண்டுவந்த திட்டங்கள் என்ன? ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை கடந்த 4 வருடங்களில் நிறைவேற்றாமல் உள்ளார்.

சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்டாலின் எத்தனுக்கு எத்தனாக உள்ளார். கருணாநிதியை விஞ்சிவிட்டார். அதனை பீகார்காரன் சொல்லிக்கொடுத்துள்ளார். பெண் காவல் அதிகாரிக்கு கூட இந்த அரசால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் 200 சீட்டில் வெற்றி பெறுவோம் என்று கூறுகின்றனர். அரிசி, பருப்பு, பால் உள்ளிட்டவைகளின் விலை உயர்வை புள்ளி விவரங்களோடு பேசினார்.

மின்கட்டணம் இன்றைக்கு 52% உயர்ந்துள்ளது. 16 நாள் வெளிநாடுகளில் முதலீட்டை ஈர்க்க சென்றவர் சைக்கிளை மட்டுமே ஓட்டினார், எந்த முதலீட்டையும் பெற்று வரவில்லை. திமுக அமைச்சர்களில் 10 விழுக்காடு பேர் ஜாமீன் உள்ளவர்கள் தான், காற்றை விற்று ஊழல் செய்து விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து வருகின்றனர். முன்பைவிட இன்றைக்கு தெளிச்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். வேங்கைவயலில் உயர்மட்ட தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை இன்றளவும் கைது செய்யவில்லை, அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார்..? என்பதற்கு விடை தெரியவில்லை. மதகலவரம் செய்து மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றம் செய்கின்றனர்.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜகவும், திமுகவும் கள்ள கூட்டணியில் உள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதனை மலுப்ப உதயநிதியும், அண்ணாமலையும் சண்டையிட்டு கொள்வது போல் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். இன்றைக்கு நம் வீடுகளில் நாய், பூனை வளர்த்தால் வரி, வரி மேல் வரி போட்டு கொண்டு மக்களை வாட்டி வருகின்றனர், வரும் காலங்களில் மக்கள் சாலையில் நடந்தால் வரி என்றும் கூட சொல்லுவார்கள். அதிமுக 10 ஆண்டுகளில் பெற்ற 3.5 லட்சம் கோடி, ஆனால் திமுக கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. தொடர்ந்து மக்களை ஏமாற்ற தயாராகி வருகின்றனர்” என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர்..! பாஜக, திமுகவை மறைமுகமாக சாடிய விஜய்..!

நம்ம பாசிசமும், பாயாசமும், அதாவது நம் அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர் என தவெக தலைவர் விஜய் மறைமுகமாக விமர்சித்தார். மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், “2026 தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம். அதற்கு பூத் ஏஜென்டுகள் மிகவும் முக்கியம்.

ஆனால் அது பெரிய கட்சிகளுக்குதான் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். கூடிய சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போகிறோம். தவெக எந்தவொரு பெரிய கட்சிக்கும் சளைத்ததல்ல என்று அன்றைக்கு தெரியவரும். இப்போது புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டு இடிருக்கிறார்கள். இங்கே அதை செயல்படுத்தவில்லையென்றால் நம் மாநில அரசுக்கு நிதி கொடுக்க மாட்டார்களாம். கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை. ஆனால் LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இங்கே எவ்வளவு பிரச்சினை நடந்து கொண்டு இருக்கிறது. நம்ம பாசிசமும், பாயாசமும், அதாவது நம் அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் ‘ஹேஷ்டேக்’ போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அடித்துக் கொள்வது போல அடித்துக் கொள்வார்களாம். இதை நாம் நம்பவேண்டுமாம். ‘வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ’

இதையெல்லாம் மக்களுக்கு நாம் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. நம் ஊர் சுயமரியாதை மிக்க ஊர். நாம் எல்லாரையும் மதிப்போம். ஆனால் சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யாரும் எந்த பள்ளியிலும் படிக்கலாம். எந்த மொழியை வேண்டுமானாலும் விருப்பத்துடன் கற்றுக் கொள்ளலாம்.

ஆனால், கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக் குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால், அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி? எனவே தவெக சார்பில் இதனை நாங்கள் உறுதியாக எதிர்ப்போம்” என விஜய் தெரிவித்தார்.

பத்ம பிரியா ஆவேசம்: இந்தியாவையே உலுக்கக்கூடிய மிகப்பெரிய ஸ்கேமுக்கு மத்திய அரசு ரெடியாகுது..!

தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை பறிப்பதுடன், இன்னொரு முறை எதிர்த்து பேசினாலும் அந்த குரலுக்கு பவர் கிடையாது என்ற அளவுக்கு மக்களவை தொகுதி மறுவரையறையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது என பத்ம பிரியா வீடியோ வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 என்பதைத் தேர்தல் சீர்திருத்தம் பரிசீலனை என்கிற பெயரால், 39 -ல் இருந்து 31 ஆக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதனால் எட்டு நாடாளுமன்ற தொகுதிகளை தமிழ்நாடு இழக்க வேண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதுபற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுகவைச் சேர்ந்த பத்ம பிரியா வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவையே உலுக்கக்கூடிய மிகப்பெரிய ஸ்கேமுக்குரெடியாகுது ஒன்றிய அரசு.. தமிழ்நாடு மாதிரியான தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை பறிப்பதுடன், இன்னொரு முறை எதிர்த்து பேசினாலும் அந்த குரலுக்கு பவர் கிடையாது அப்படீன்ற அளவுக்கு மக்களவை தொகுதி மறுவரையறையை கையில் எடுத்துள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் எவ்வளவு MP சீட் கிடைக்கும் என்பதை மக்கள் தொகையை அடிப்படையாக முடிவெடுக்க போகிறது.

கொஞ்ச வருடங்களுக்கு முன்பு மக்கள் தொகையை குறையுங்கள் என மத்திய அரசு கூறியது. அதன்படி தென்னிந்திய மாநிலங்கள் மக்கள் தொகையை குறைப்பதை சரியாக செய்தார்கள். முக்கியமாக தமிழ்நாடு மாதிரியான மாநிலங்கள் செய்ததால், இன்றைக்கு நம்முடைய பிறப்பு விகிதம் 1.8 ஆக உள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் மாதிரியான மாநிலங்களில் 2.3 ஆக இருக்கிறது.. ஆனால் நீங்கள் சொன்னதை கேட்டு நடந்ததால் என்ன நடந்திருக்கு பாருங்க.

இன்றைக்கு மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து MP சீட் என்று சொல்கிறீர்கள்.. MP சீட் எண்ணிக்கை குறைந்துவிடும். பணம் ஒதுக்கீடு குறைந்துவிடும்.. அதிகாரங்களும் குறைந்துவிடும்.. ஏற்கனவே பணத்தை, பவரையும் கையில் வைத்துக் கொண்டு 4 கவர்மெண்ட்டை கையில் வைத்திருக்கும் நீங்கள்.. ஒட்டுமொத்த இந்தியாவையும் உங்கக்கிட்ட இருக்குற மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கிற நீங்க, அரசியல் பிரதிநிதித்துவத்தையும் உங்கள் சைடுநீங்கள் அதிகரித்துக் கொண்டால், தென்னிந்தியா எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியுமா? வெறும் பால் கரக்குற மாடு மாதிரி, வெறும் டேக்ஸ் கறக்குற மாடு மாதிரி தானே பயன்படுத்துவீங்க..

மண் சார்ந்து, மக்கள் சார்ந்து, மரபு சார்ந்து, மக்கள் சார்ந்து செயல்படுகிறோம்.. இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான பிரச்சனை மட்டும் கிடையாது. கட்சி, ஆட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை கிடையாது.. மக்களின் எதிர்காலத்தை முன்னெடுக்கும் பிரச்சனை.. ஏற்கனவே மாநில பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கிறது.முக்கியமான பார்த்தீங்கன்னா தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார் பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்கிறது. காரணம் வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகம் என்கிறார்கள்.. இப்படி ஒரு நிலைமை வந்தால் என்னாகும்…மக்களாகிய நீங்களும் நானும் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.. ஆனால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே குரல் கொடுத்து விட்டார்.. இனிமே பற்றிக்கொள்ளும் காட்டுத்தீ போல்.. ஆனால் இப்படி ஒன்று நடக்கிறது என்பதை மக்களாகிய நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என பத்ம பிரியா தெரிவித்தார்.

நாஞ்சில் சம்பத்: அண்ணாமலை சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது..!

திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது, திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற பெரியார் குறித்த கருத்தரங்கில் நாஞ்சில் சம்பத் பேசினார். அப்போது, இச்சை வந்தால் தாய், மகளுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக சீமான் பேசினார். அப்போதே சமூக வலைதளத்தில், தாம் செய்வதை எல்லாம் பெரியார் சொன்னதாக பேசுகிறார் சீமான் என பதிவிட்டிருந்தேன்.

தந்தை பெரியாரை இழிவாகப் பேசும் சீமானை ஏன் திராவிட மாடல் அரசு கைது செய்யாமல் இருக்கிறது என என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்று பதில் தந்தேன். அத்தகைய பைத்தியத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை உறவினர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சீமான் பேசுவதைப் போல தடித்தனமான, தாறுமாறான விமர்சனங்களை பெரியாரின் சீடர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்; எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

பெரியாரை கொச்சைப்படுத்துவதற்கு பாஜக ஒரு வேலைத் திட்டம் வைத்துள்ளது. அந்த வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குறைந்த கூலிக்கான நபர்தான் சீமான். சீமானுக்கு மேடை போட்டுக் கொடுத்த பாவிகள் இருவர்; ஒருவர் கோவை ராமகிருட்டிணன் மற்றொருவர் கொளத்தூர் மணி. விடுதலைப் புலிகளிடமே மதுவை வாங்கி வர சொன்ன சீமான், தன்னையே விற்பனை செய்யக் கூடியவர்தான்; ஆனால் தமிழா! நீ உன்னை விற்காதே என மேடைகளில் பேசுவார் சீமான்.

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை? ஏன் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் தரவில்லை? எங்கள் தருகிற நிதியில் எங்களுக்கான பங்கை ஏன் தரவில்லை? தேர்தல் வருகிறது என்பதற்காக பீகாருக்கு சலுகை காட்டும் மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுக்கிறீர்கள்? திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது, திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என நாஞ்சில் சம்பத் பேசினார்.

சீமான் 356-வது பிரிவின் கீழ் ஆட்சியை கலைத்தால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது..!

தன்மானம் மிக்க ஒரு இனம். அப்படி திமுகவின் ஆட்சியை கலைத்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது. அந்த இடத்தில்தான் திமிராக நிற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடு பார்ப்போம் என சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னையில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மத்தியில் ஆளும் கட்சிகள், அரசுகள் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்போம் என பூச்சாண்டி காட்டுவார்கள். இந்த பூச்சாண்டிக்குதான் நாம் பயப்படக் கூடாது.

மக்களுக்காக நின்றால் திமுக வெல்லும் 356-வது பிரிவின் கீழ் திமுக ஆட்சியைக் கலைத்துவிடு.. மக்களுக்காக சண்டை போட்டு.. நிதியை தர முடியாதுன்னு மத்திய அரசு சொன்னதால் நாம் நம் வரி வருவாயை தர முடியாது என சொன்னோம்.. ஆட்சியை கலைத்தார்கள்.. சரி மீண்டும் சட்டசபை தேர்தல் வரும்தானே.. அப்போது யார் வெல்வார்கள்? மக்களுக்காக நிற்கிற கட்சி எதுவோ வெல்லும். இந்த இடத்தில்தான் நாம் சமரசம் செய்யக் கூடாது.

பறிபோன உரிமைகள் ஆட்சி கலைப்பு அஞ்சியதால்தான் காவிரி நதிநீர் உரிமை போனது; கச்சத்தீவு பறி போனது; மாநிலப் பட்டியலில் இருந்து கல்வி, பொதுப் பட்டியலுக்குப் போனது. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா? மத்திய அரசு என்னதான் செய்ய முடியும்? ஆட்சியைக் கலைத்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா? சொல்லுங்க ஆட்சிக்கு மீண்டும் வர முடியாதா? இப்படித்தான் 2009-ல் தமிழினத்தை கொலை செய்த போது பதவிக்கு பயந்து உட்கார்ந்திருந்தோம்.. சிங்களவன் லட்சக்கணக்கில் ஈழத் தமிழரை கொன்று குவித்தான்.

ஆட்சியை கலைத்தால் திமுகதான் வெல்லும் மத்திய அரசை போய்யா.. என்று சொல்லிவிட்டு ஆட்சியை இழந்து மீண்டும் தேர்தலை சந்தித்தால் மக்கள் மறுபடியும் உங்களைத்தான் தேர்வு செய்வான். அப்படி செய்யாமல் இருக்க மானம் கெட்ட, உணர்வு கெட்ட, அறிவு கெட்டவன் தமிழன் அல்ல. தன்மானம் மிக்க ஒரு இனம். அப்படி திமுகவின் ஆட்சியை கலைத்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது. அந்த இடத்தில்தான் திமிராக நிற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடு பார்ப்போம் என சொல்ல வேண்டும்.

யார் பிரிவினைவாதி? தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதே பாஜகவும் காங்கிரஸும்தான். இது எங்கள் நிலம். தமிழர் நிலம். நாங்கள் யாருக்கு தேசத்துரோகிகள்? இது என்ன இந்தி பேசுகிறவன் நாடா? எவனை கேட்டு இந்தி திணிப்பை நடத்துகிறீர்கள்? பல மொழி பேசுகிற மக்களின் தேசம் இது.. ஒரு 4 மாநிலத்தில் பேசப்படுகிறதா இந்தி மொழி? என் வரியை வைத்துக் கொண்டு தரவே முடியாது என்பது பிரிவினையை தூண்டுகிறதா? தேசப்பற்றை உருவாக்குகிறதா? யார் பிரிவினையை தூண்டுவது? இந்தியாவின் அதிக வருவாய் தருவதில் 2-வது பெரிய மாநிலம் என் தமிழ்நாடு. என் நிதியை வைத்துக் கொண்டு தர மறுக்கும் நீதிதான் தேச ஒருமைப்பாட்டை சிதைப்பது? என சீமான் தெரிவித்தார்.

பி.கே. சேகர்பாபு கருத்து: காளியம்மாள் வெளியே நாதக..! உள்ளே திமுகவா..!?

காளியம்மாள் திமுகவில் இணைந்தால் அவரை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் உறவுகள் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளியம்மாளின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு இருந்தது.

இதனால் காளியம்மாள் நாதக-வில் இருந்து விலகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது. அதை விட அவர் திமுகவில் இணைகிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த விழாவில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் எல்லாம் கலந்து கொள்கிறார்கள். இது குறித்து காளியம்மாள் கூறுகையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்து இருந்தார்.

இது குறித்து சீமானிடம் கேட்ட போது கட்சிக்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம். அது போல் போனால் போகட்டும் என வழியனுப்பி வைக்க வேண்டும். இலையுதிர்காலம் போல் எங்கள் கட்சிக்கு இது களையுதிர்காலம் என தெரிவித்திருந்தார். எனவே காளியம்மாள் எந்த கட்சியில் இணைய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காளியம்மாள் மீது சீமான் அண்மைக்காலமாக கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் திமுகவில் இணைய போகிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். கட்சியில் இருந்து செல்வோர் செல்லலாம் என சீமானே சிக்னல் கொடுத்துவிட்டாரே! அப்படி வந்தால் காளியம்மாளை ஏற்பது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

பிரகாஷ் ராஜ் ‛Get Out Modi’.. ஏன்யா இந்தி பேச சொல்லி கட்டாயப்படுத்துறீங்க..!

உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும் இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழில் பதிவிட்டு மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டும் மத்திய அரசு வழங்காமல் உள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே அந்த நிதி விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி நிதி விடுவிக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவாக கூறிவிட்டார்.

இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கிடையே கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.. பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம்.. நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு..” என்று சவால் விட்டார்.

இதையடுத்து எக்ஸ் பக்கத்தில், ‛GetOutModi’ என்ற ஹேஷ்டேக்கை நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் செய்தனர். அதோடு பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அந்த ஹேஷ்டேக்கில் அவர்கள் பதிவுகளை வெளியிட்டனர்.

இந்நிலையில் தான் தமிழக அரசுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது..” என பிரகாஷ் ராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.