எடப்பாடி பழனிசாமி: அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா…?

அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் மைக்கை பிடித்தாலே தேர்தல், கூட்டணி தொடர்பாகவே பேசி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் மகளிருக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை கண்டித்து அதிமுக தரப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் கையெழுத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டு தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு, “தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.” என்றார்.

அதனைத் தொடர்ந்து, “அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி. அதிமுகவை தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது.” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

அண்ணாமலை: பாஜக தீண்டத்தகாத கட்சி..! பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலை..!

பாஜக கட்சி நோட்டா கட்சி.. தீண்டத்தகாத கட்சி.. இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக தரப்பில் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதனிடையே அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. ஏற்கனவே பாமக மூத்த தலைவர் ஜிகே மணி இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் பழனிசாமி கலந்து கொண்டார். இன்னொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மகன் விஜய் விகாஸ் இல்லத் திருமண விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வாழ்த்தினார். அப்போது அண்ணாமலைக்கு எழுந்துநின்று கைகுலுக்கி சிரித்த முகத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் வரவேற்பு அளித்தனர்.

இதனால் 2021 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி போல் மீண்டும் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில், திமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது என்று அறிவித்தார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமையும் என்று தமிழக அரசியலில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார்.

பாஜக கட்சி நோட்டா கட்சி.. தீண்டத்தகாத கட்சி.. பாஜக வந்ததால் தான் நாங்கள் தோற்றோம் என்று பேசினார்கள். ஆனால் இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலையை ஒவ்வொரு பாஜக தொண்டனும், தலைவனும் உருவாக்கி இருக்கிறார்கள். இதனை நினைத்து பெருமை கொள்கிறேன். பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருக்கிறோம்.

நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. எங்களின் நோக்கம் பாஜகவை நிலை நிறுத்துவதுதான். கடந்த 5 ஆண்டுகளில் எப்படியெல்லாம் பேசினார்கள். அதனை கடந்து மற்ற கட்சித் தலைவர்கள் பேசுவதை பாருங்கள். சரியான நேரத்தில் கூட்டணி தொடர்பாக பேசுவோம். தேசிய தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் கூட்டணி பற்றி சரியான நேரத்தில் பேசுவோம்.

பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பல்வேறு தலைவர்கள் பயணிக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேசிய கட்சி அப்படி பயணிக்க முடியாது. எந்த கட்சியையோ, தலைவரையோ சிறுமைப்படுத்த விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என அண்ணாமலை தெரிவித்தார்.

தினகரன்: தலைமையில் இருப்பவர்கள் அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம்..!

அதிமுக தலைமையில் இருப்பவர்கள் தங்களை ஜெயலலிதா என்று நினைத்து கொண்டுள்ளனர். அது வெறும் மாய பிம்பம். எனவே அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம்,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். தமிழகத்தை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக திமுக அரசு மாற்றிவிட்டதாக கூறி, தமிழக அரசைக் கண்டித்து அமமுக சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம்முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமமுக பொதுசெயலர் டிடிவி தினகரன் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். “கடந்த 10 தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது. திருநெல்வேலியில் அதிமுக 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. வரும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடும்.

வரும் சட்டப் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு வலுவான கூட்டணியாக அமையும். தற்போது அதிமுக தலைமையில் இருப்பவர்கள் தங்களை ஜெயலலிதா என்று நினைத்து கொண்டுள்ளனர். அது வெறும் மாய பிம்பம். எனவே அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம்” என்று அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி: எதிர்க்கட்சி நாங்கதான்.. ! 2026-ஆம் ஆண்டு ஆளுங்கட்சி..!

“ஆளுகின்ற கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகள்தான். சட்டப்பேரவையில் இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான். வரும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக அதிமுக வரும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் நேற்று ரத்த தான முகாம் நடைபெற்றது.

இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துப் பேசினார். அதன் பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, “சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும். அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பார்கள். தமிழகத்தில் பல இடங்களில் கள்ளச் சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் போதை பொருள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. எனவே, கள்ளச் சாராய விற்பனை, போதைப் பொருள் விற்பனை போன்றவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில், பாலியல் வன்கொடுமை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால், தமிழக அரசு சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது, பாலியல் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறுகிறது. பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. வேலியே பயிரை மேய்வது போல் ஒருசில ஆசிரியர்கள் செய்யும் தவறு, ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆசிரியர்களை நம்பித் தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆசிரியர்கள்தான் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும் தவெக தான் எதிர்க்கட்சி என அக்கட்சியின் கூட்டத்தில் பேசப்பட்டது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “ஆளுகின்ற கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகள்தான். சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக மக்கள் அதிமுகவை அங்கீகரித்துள்ளனர். அதிமுக இப்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக அதிமுக வரும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ விமர்சனம்: சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி திமுக..!

சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரை மாகப்பூபாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பொதுமக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ,” அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உயர்கல்வி நிலையங்கள் அதிகரிப்பால் இடைநிற்றல் இல்லாமல் கல்வியில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கி உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக இஸ்ரோவில் கூட தமிழர்கள் உயர்பதவியில் அலங்கரித்து வந்துள்ளனர் மற்றும் வருகின்றனர். மடிக்கணினி வழங்கி மாணவர்களுக்கு வசதி படைத்து கொடுத்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஜெ., பெண் சிசு பாதுகாவலர் என அன்னை தெரசா பாராட்டினார். கைலி கட்டியவர்கள் தீவிரவாதிகள் என்று கருணாநிதி சொன்னார். அத்தகைய திமுகவிற்கு இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். திமுகவினர் சிறுபான்மையினர் நலனுக்கு கொண்டுவந்த திட்டங்கள் என்ன? ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை கடந்த 4 வருடங்களில் நிறைவேற்றாமல் உள்ளார்.

சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்டாலின் எத்தனுக்கு எத்தனாக உள்ளார். கருணாநிதியை விஞ்சிவிட்டார். அதனை பீகார்காரன் சொல்லிக்கொடுத்துள்ளார். பெண் காவல் அதிகாரிக்கு கூட இந்த அரசால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் 200 சீட்டில் வெற்றி பெறுவோம் என்று கூறுகின்றனர். அரிசி, பருப்பு, பால் உள்ளிட்டவைகளின் விலை உயர்வை புள்ளி விவரங்களோடு பேசினார்.

மின்கட்டணம் இன்றைக்கு 52% உயர்ந்துள்ளது. 16 நாள் வெளிநாடுகளில் முதலீட்டை ஈர்க்க சென்றவர் சைக்கிளை மட்டுமே ஓட்டினார், எந்த முதலீட்டையும் பெற்று வரவில்லை. திமுக அமைச்சர்களில் 10 விழுக்காடு பேர் ஜாமீன் உள்ளவர்கள் தான், காற்றை விற்று ஊழல் செய்து விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து வருகின்றனர். முன்பைவிட இன்றைக்கு தெளிச்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். வேங்கைவயலில் உயர்மட்ட தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை இன்றளவும் கைது செய்யவில்லை, அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார்..? என்பதற்கு விடை தெரியவில்லை. மதகலவரம் செய்து மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றம் செய்கின்றனர்.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜகவும், திமுகவும் கள்ள கூட்டணியில் உள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதனை மலுப்ப உதயநிதியும், அண்ணாமலையும் சண்டையிட்டு கொள்வது போல் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். இன்றைக்கு நம் வீடுகளில் நாய், பூனை வளர்த்தால் வரி, வரி மேல் வரி போட்டு கொண்டு மக்களை வாட்டி வருகின்றனர், வரும் காலங்களில் மக்கள் சாலையில் நடந்தால் வரி என்றும் கூட சொல்லுவார்கள். அதிமுக 10 ஆண்டுகளில் பெற்ற 3.5 லட்சம் கோடி, ஆனால் திமுக கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. தொடர்ந்து மக்களை ஏமாற்ற தயாராகி வருகின்றனர்” என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமைத்து வியத்தகு வெற்றியை பெறுவோம்..!

அதிமுக தலைமையில் வெற்றிக் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை இதயத்தில் கொண்டு வாழ்ந்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் என் அன்பு வணக்கம். நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில், அவரது புகழ் ஓங்குக என்ற வாழ்த்தொலி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் எதிரொலிக்கிறது.

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், எல்லா நேரத்திலும் தாயாகவும், சகோதரியாகவும், உற்ற தோழமை கொண்டும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம்போல் உயர்ந்து விளங்கிய ஜெயலலிதா ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும், நகர்விலும் தமிழ் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்கின்றார்கள். அவருடைய அரசு எவ்வளவு எளிமையாகவும், மக்களின் தேவை அறிந்தும் நடைபெற்றது என்பதையும்; இன்றைய இருள் மிகுந்த விடியா திமுக அரசு எப்படியெல்லாம் மக்களை அலைக்கழித்து, அஞ்சி, அஞ்சி வாழச் செய்கிறது என்பது பற்றியும், தமிழ் நாடு முழுவதும் மக்கள் பேசுகிறார்கள்.

எப்போது தேர்தல் வரும்,ஜெயலலிதாவின் அரசை எப்போது மீண்டும் அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். மிகச் சிறந்த நிர்வாகியாகவும், மத்திய-மாநில உறவுகளை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனையும், செயல் திட்டமும் கொண்டவராகவும், தமிழ் நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர்.

பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சமூக, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்திய நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் இந்த விடியா அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டது.

தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம், காங்கிரஸ்-திமுக கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கொடுத்தும்; மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும் இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ஜெயலலிதாவின் அரசை நிதி நெருக்கடிக்குத் தள்ளி, நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற கெடுமதியுடன், திமுக அங்கம் வகித்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டது.

இருந்தபோதிலும், தனது நிர்வாகத் திறமையால் அனைத்து சவால்களையும் சமாளித்து ஏராளமான நலத் திட்டங்களை தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட கழக அரசும் அந்த முயற்சியில் தொய்வின்றி செயலாற்றியது. இன்றைக்கு, விடியா திமுக அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்றக்கூட திறனற்றதாக உள்ளது. மிகப் பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும், தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது.

பொழுது விடிந்து, பொழுது போனால், தமிழ் நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலையும், பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. நான்கு திசைகளிலும் தினந்தோறும் கள்ளச் சாராயம், போதைப் பொருள் புழக்கம், வெட்டு, குத்து, கொலை என்று சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உண்மைகளை எடுத்துச் சொல்வோருக்கு வாய்ப் பூட்டு போடப்படுகிறது.

இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும்; தமிழ் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும்; தமிழ் நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரே தீர்வு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நல்லாட்சிகளைப் போல, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வேண்டும். நான் செல்லும் இடங்களில் எல்லாம் வெள்ளம்போல் திரண்டு வரும் கழக உடன்பிறப்புகளையும், தமிழ் நாட்டு நலன் நாடும் மக்களையும் பார்க்கையில், கழக ஆட்சியே அடுத்து மலரப்போகும் நல்லாட்சி என்ற நம்பிக்கை என்னுள் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது.

இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது.

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம்; மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம்; இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்றவரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று ஜெயலலிதா சூளுரைத்தார்.

அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் ஜெயலலிதா பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம்.

அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். “நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்! வாழ்க புரட்சித் தலைவி அம்மாவின் புகழ்! வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அட்டாக் விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா..!?

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா ? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக தலைமையில் சிறப்புமிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, பணத்திற்காக பதவிக்காக கட்சியை காட்டிக் கொடுக்க தயாராக இருந்ததாகவும் விமர்சித்துள்ளார்.

கடந்த வாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் தயார் என்று அறிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், திடீரென ஓபிஎஸ் இப்படி அறிவித்தது பேசு பொருளாகியது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் இந்த அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டது.

இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும். தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா ? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது. “அதிமுக தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்றவரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்று ஜெயலலிதா சூளுரைத்தார்.

அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் ஜெயலலிதாவின் பிறந்தநாள். அதிமுக தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

புகழேந்தி: மத்திய அமைச்சர் வரலாறு தெரியாமல் பேசுகிறார்…! அண்ணாமலை வரலாற்றை தெரிந்து கொள்ளவேண்டும்..!

1965 -ஆம் ஆண்டின் வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சர் பேசுகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த வரலாற்றை தெரிந்து கொண்டு மத்திய அமைச்சருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என புகழேந்தி தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் புகழேந்தி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் இந்தி புகுத்தும் பாணியில் ஒரே கல்வி கொள்கை திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பல மாநிலங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறது

தமிழகம் ஏற்க மறுப்பதை ஒப்புக்கொள்ள முடியாது. கல்வி நிதி வழங்க முடியாது என்றெல்லாம் பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். 1965 -ஆம் ஆண்டின் வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சர் பேசுகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த வரலாற்றை தெரிந்து கொண்டு மத்திய அமைச்சருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். உலகத்திலேயே இந்தியா என்கின்ற நாட்டிலே உள்ள தமிழ்நாடு என்கிற மாநிலம் மாத்திரம் தான் மொழிக்காக போராடிய வரலாற்றை பெற்றது. எண்ணற்ற தலைவர்கள் மொழி போருக்காக இன்னுயிரை தியாகம் செய்தார்கள்.

எனது தந்தையார் கூட ஆறு முறை சிறை சென்றவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என எங்களை வளர்த்தவர்கள் தமிழ் மொழிக்காக போராடி பெருமை சேர்த்தவர்கள். அண்ணா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த பொழுது இந்தி தான் ஆட்சி மொழியாக வேண்டும் என்று வடக்கே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று வற்புறுத்தி பேசினார்கள்.

இரண்டு நாள் தொடர்ந்து நடந்த அந்த அமளிக்கு பின்னர் அறிஞர் அண்ணா, வடக்கே பல மாநிலங்களில் இந்தி பேசுவதாலேயே அதனை திணித்து விட முடியாது. இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது. காக்காய் பல இடங்களில் அதிகமாக இருக்கிறது. அதனால் காக்காவை நாம் தேசிய பறவையாக ஏற்றுக் கொள்ளவில்லை. வண்ண தோகை விரித்தாடும் மயிலை தான் தேசிய பறவையாக ஏற்றுக் கொண்டோம்.

எங்கள் தாய்மொழி தேசிய பறவைக்கு சமமானது. உங்களது மொழி காக்கைக்கு சமமானது என்று திரும்ப பதில் அளித்தார்கள். திராவிட இயக்கத் தலைவர்கள் போராடிய பின்னர் இந்தி மொழி ஆட்சி மொழி அல்ல என்கின்ற சட்டம் ஜவஹர்லால் நேருவால் கொண்டு வரப்பட்டது இதையெல்லாம் மறந்துவிட்டு இந்திக்கு ஆதரவாக பேசுவதும் திணிக்க முயல்வதும் சுதந்திரம் ஆகாது. அதிமுக தலைவர்கள் இதனை வேடிக்கை பார்க்கிறார்கள். மாநிலத்தில் ஆளுகின்ற அரசு இதனை எதிர்க்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டு இருக்கிறது.

திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் எதிர்க்கிறார்கள். அதிமுக தலைவர்களை பற்றி கவலை கொள்ள வேண்டாம் நானே எனது தலைமையில் அதிமுக தொண்டர்களை ஒன்று திரட்டி இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுப்பேன். அதுதான் அதிமுக தொண்டர்களின் உரிமை குரலாக இருக்கும் இவர்களைப் பற்றி கவலை இல்லை என புகழேந்தி தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ விளக்கம்: எடப்பாடி பழனிசாமி vs செங்கோட்டையன் பிரச்சனை..! அண்ணன் – தம்பி பிரச்சனை..!

செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான பிரச்சனை அண்ணன் – தம்பி பிரச்சனையை போன்றது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர்களான MGR மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. அதனால் அந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக தரப்பில் கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்து வேறு அனைவரின் பெயர்களையும் கூறினார். அதுமட்டுமல்லாமல் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நேற்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகள் நடக்க வேண்டுமென்றால் அதிமுக இருக்க வேண்டும். ஒன்றுபட வேண்டும், வளர்ச்சி பெற வேண்டும். ஒரு சின்ன சம்பவம் நடந்துவிட்டது. ஒரு குடும்பத்தில் அண்ணன் – தம்பி இடையில் எவ்வளவு பிரச்சனைகள் வரும்.. அதன்பின்னரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் பிரச்சனையை பெரிதுபடுத்த தேவையில்லை.

அடுத்து 202ல் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்கிறோம். அதிமுகவில் எந்த உட்கட்சி விவகாரமும் தூக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின், யாராக இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறுவேன்.. சாட்டையை சுழற்றுவேன் என்றெல்லாம் கூறினார். ஆனால் விஜய்-தான் சாட்டையை சுழற்றுவதாக போட்டுள்ளார்கள். செங்கோட்டையன் அண்ணன் எங்களின் மூத்த சகோதரர். MGR, ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவர். அவர் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டாரா? ஆனால் காவலர்களை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை விட்டுவிட்டு கேட்காத ஒருவருக்கு காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு ஓட விட்ட செங்கோட்டையன்..!

இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்” என ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு போட்டு செங்கோட்டையன் காட்டினார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய பகுதியில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 108-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்ட மேடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவரின் புகைப்படங்களும் பெரிதாக ஒரே அளவில் இடம் பெற்றிருந்தன. இந்த விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “தடுக்கி விழுந்தால் தமிழ்நாட்டில் யார் எந்த ஊரில் உள்ளார்கள் என எனக்கு தெரியும். எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது.

எதிர்கட்சித் தலைவரின் கட்டளையில் தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனை ஆண்டுகளில் அரசியல் உள்ளேன், எண்ணற்ற தலைவர்களை பார்த்துள்ளேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் நான் சென்று கொண்டுள்ளேன். செய்தியாளர்கள் என்னிடம் எதவாது கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர். காலையில் சொன்னதை இப்போதும் சொல்கிறேன், நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் சொல்ல மாட்டேன்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படம் இல்லை. அவர்கள் புகைப்படம் இல்லாததால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, நான் புறக்கணிக்கவில்லை. அதைப்பற்றி தற்போது நிறைய பேர் பேசி வருகின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன். என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள். நான் தெளிவாக இருக்கிறேன்.

காவல்துறை பாதுகாப்பு அவர்கள் போட்டு இருக்கின்றனர். பாதுகாப்பு கண்காணிப்பு என்பது காவல் துறை போட்டது. நான் போட சொல்லவில்லை. கோட்டைக்கு வர வேண்டும் என்றால் செங்கோட்டையனை சுற்றி வருகின்றார்கள். 43 ஆண்டு ஆட்சியில் நான் யாரையும் தவறாக பேசியதில்லை. கோபப்பட்டது இல்லை. ஜெயலலிதாவின் பணிகளை கண்கூடாகப் பார்த்தவன் நான். ஜெயலலிதா விரலை நீட்டும் போதே, அவர் கை அசைக்கும்போதே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். ஏன் கழற்றி விட்டார் எனக் கேட்பார்கள். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது, அதையெல்லாம் சொன்னால் தவறாகப் போய்விடும்.

ஏன் செங்கோட்டையனுக்கு கட்சியில் 2 பெரிய பொறுப்புகளை தந்தேன் என ஜெயலலிதா சொன்னது இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது. “எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர் செங்கோட்டையன்” என ஜெயலலிதா கூறினார். தொடர்ந்து, தன்னைப் பற்றி ஜெயலலிதா பேசும் ஆடியோ ஒன்றையும் மைக் முன்பு போட்டு செங்கோட்டையன் காட்டினார். “இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்.” என ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு போட்டுக் காட்டினார்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், “தன்னலம் கருதாமல் செயல்படக்கூடியவன் நான், இயக்கம் ஒன்றே பெரிதென நினைப்பவன். நான் என்றைக்கும் என்னை தலைவன் என்று சொன்னதில்லை. என்றைக்கும் தொண்டன் என்றுதான் சொல்லி இருக்கிறேன். அதில் இருந்து நீங்கள் என்னை புரிந்துகொள்ளலாம். மீண்டும் தமிழகத்தில் தொண்டர்களோடு தொண்டராக இருந்து பணியாற்றுவேன்” என செங்கோட்டையன் பேசினார்.