2015 முதல் 2018 வரை திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ. 17 கோடி ஊழல் நடைபெற்றதாக திண்டுக்கல் மாநகராட்சியின் அப்போதைய ஆணையர் மனோகரன் உட்பட 5 அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 2014-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதையடுத்து திண்டுக்கல்லை சுற்றியுள்ள பால கிருஷ்ணாபுரம், பள்ளபட்டி, அடியனூத்து உள்ளிட்ட ஊராட்சிகள் மற்றும் நகராட்சி எல்லைக்குள் இருந்த 48 வார்டுகளும் திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்தத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நகர வளர்ச்சி இல்லாமல் திண்டுக்கல் பெயரளவில் மட்டும் மாநகராட்சியாக இருந்து நகராட்சி போலவே செயல்பட்டு வருகிறது. நகர எல்லை விரிவாக்கம் செய்யப்படாததால் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய முடியவில்லை. மேலும், பல முறைகேடுகளில் திண்டுக்கல் மாநகராட்சி சிக்கித் தவிக்கிறது எனவும் புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப் பணம் 4.69 கோடி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையில் வரி வசூல் மைய இளநிலை உதவியாளர் சரவணன், கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ், நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் , இளஞ்செழியன் , சாணார்பட்டியை சேர்ந்த முரளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 2015 முதல் 2018 வரை திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ. 17 கோடி ஊழல் நடைபெற்றதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ள நிலையில், திண்டுக்கல் மாநகராட்சியின் அப்போதைய கமிஷனர் மனோகரன் உட்பட 5 அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் துணை இயக்குனர் தலைமையில் 2015-16 முதல் 2018 -19 வரை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது.

இதில், வருவாய் மற்றும் முதலீடு, குடிநீர் வழங்கள் நிதி, பாதாள சாக்கடை நிதி மற்றும் தொடக்க கல்வி நிதி ஆகியவற்றிலிருந்து ரூ. 17 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில், அப்போதைய மாநகராட்சி ஆணையர் மனோகர் மற்றும் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன் ஆகியோர் திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 1 முதல் 12 வரை சொத்து வரி முறைகேட்டில் ரூ.18,00,272 முறைகேடு நடந்துள்ளதாக தெரிய வருகிறது.
அதேபோல், சென்னையைச் சேர்ந்த சுசி இண்டஸ்ட்ரீஸ் மூலமாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு 137 குப்பை தொட்டிகள் ரூ.19834 மதிப்பை ரூ.37750 என உயர்த்தி வாங்கியது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முன்னாள் மாநகராட்சி ஆணையர் மனோகர், முன்னாள் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன், முன்னாள் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் கணேசன் (Rtd), முன்னாள் மாநகராட்சி துணை பொறியாளர் மாரியப்பன், மாநகராட்சி துணை பொறியாளர் சுவாமிநாதன் மற்றும் சென்னை சுசி இண்டஸ்ட்ரி உரிமையாளர் நடராஜன் ஆகியோர் மீது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.