இந்தியாவில் முதல் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ஜீ டிவி மற்றும் எஸ்ஸல் குழுமத்தின் நிறுவனர் சுபாஷ் சந்திரா. இவர் தனிநபர் கடனடைப்பு விவகாரத்தில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் 22,000 கோடி கடனுக்கு வெறும் 6.5 கோடி கட்டினால் போதும் என வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு இந்திய கார்ப்பரேட் உலகையே அதிர வைத்துள்ளது. எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸில், எச்டிஎஃப்சி, ஆக்சிஸ் பேங்க், கனரா பேங்க் மற்றும் யூனியன் பேங்க் போன்ற பெரிய வங்கிகள் மற்றும் பல வங்கிகளில் கடன் பெற்று வட்டியும் முதலுமாக சுபாஷ் சந்திரா செலுத்த வேண்டிய ₹22,006.57 கோடி கடனானது.
பொதுவாக கடன் வாங்கியவர்கள் கடனை கட்ட முடியாவிட்டால் நீதிமன்றத்தை அணுகி திவால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர முடியும். அதேபோல் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் தொழிலதிபர்கள் தங்கள் நிலையை குறிப்பிட்டு திவால் நடவடிக்கை NCLT அமைப்பிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த அமைப்பில் நீதிபதிகள் விசாரணை நடத்தி நிவாரணம் தருவார்கள்.
2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ந் தேதி இந்த வழக்கை விசாரித்த இரு உறுப்பினர்கள் கொண்ட NCLT அமர்வு, ஆளுக்கொரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இந்தச் சிக்கலைத் தீர்க்க, குடியரசுத் தலைவரின் பரிந்துரைப்படி 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-வது நீதிபதியாக நிலேஷ் சர்மா நியமிக்கப்பட்டார். தற்போது நிலேஷ் சர்மா அளித்த தீர்ப்பு, சுபாஷ் சந்திராவின் திட்டத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு தற்போது அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், சுபாஷ் சந்திரா செலுத்த வேண்டிய ₹22,006.57 கோடி கடனுக்கு ஈடாக, வெறும் ₹6.5 கோடியை மட்டும் செலுத்தும் அவரது சீரமைப்புத் திட்டத்திற்கு NCLT ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 99.97% தொகையை “ஹேர்கட்” செய்ய தீர்ப்பாயம் அனுமதித்துள்ளது. ஹேர் கட் என்பது கடனை தள்ளுபடி செய்பவதை மிக பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் குறியீட்டு பெயராகும்.
கடந்த 2024 ம் ஆண்டு நவம்பர் 2024-ல் நடந்த கடன் கொடுத்தோருக்கான கூட்டத்திலேயே எச்டிஎஃப்சி, ஆக்சிஸ் பேங்க், கனரா பேங்க், எல்.ஐ.சி ஹவுசிங் மற்றும் யூனியன் பேங்க் போன்ற பெரிய வங்கிகள் இத்திட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்த நிலையில் 80.814% வாக்குகள் ஆதரவுடன் இத்திட்டம் ஏற்கப்பட்டது. IBC சட்டப்பிரிவு 115-ன் படி, இந்தத் திட்டத்தை எதிர்த்த வங்கிகளுக்கும் இந்தத் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டியது அவசியமாகும்.
சுபாஷ் சந்திராவிடம் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதால், இந்த ₹6.5 கோடியை நிராகரித்தால் வங்கிகளுக்கு இதைவிடக் குறைந்த தொகையே கிடைக்கும் என்பதால் NCLT இத்திட்டத்தை உறுதி செய்துள்ளது. அனில் குமார் மற்றும் சுனில் ஜெயின் மூலமாகத் தாக்கல் செய்யப்பட்ட 1,260 தனிநபர்களின் கோரிக்கைகளை மட்டும் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அந்தத் தொகையை மற்ற தகுதியான கடனீந்தோருக்குப் பிரித்துக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் முதன்மை NCLT அமர்வு இதற்கான இறுதி உத்தரவைப் பிறப்பிக்கப்பட உள்ளது.