பெரியார், அண்ணா, எம்ஜிஆர், விஜய்காந்த் ஆகியோர் சிந்தனையில் தான் கட்சி நடத்துகிறார்கள். எனவே 3-வது இடம் பிடிப்பதற்கு விஜய் – சீமான் இடையே போட்டி என முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மூவரசம்பட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், முன்னாள் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் .அப்போது, “விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மக்களை இணைக்கும் விழாவாக உள்ளது. இந்த விழாக்களை மதம் சார்ந்தது என்பார்கள்.
ஆனால் கலையை வளர்க்கவும், அன்னதானம் செய்யவும் பயன்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆன்மீகம் தான் வளர்ந்து ஓங்கும். விநாயகர் சதுர்த்திக்கு வேறு மாநில முதல்வர்கள் வாழ்த்து சொல்கின்றனர். நம் முதலமைச்சர் மட்டும் வாழ்த்து சொல்லாதது தவறு. மன்னிக்க முடியாத குற்றம். மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும போது முதலமைச்சர் மதிக்க வேண்டும்.

தமிழ்நாடு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல பிரச்சனைகள் உள்ளன. ஆனால் முதலமைச்சர் பீகார் சென்று விட்டார். இங்கு பீகார் மக்களை குறை சொல்லி விட்டு அங்கு சென்று உயர்த்தி பேசி இருக்கிறார். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வாங்கிய மனுக்கள் எல்லாம் வைகை ஆற்றில் மிதக்கிறது. தவளையுடன் ஸ்டாலின், மீன்களுடன் ஸ்டாலின் என்று ஆரம்பித்து உள்ளாரோ என தெரியவில்லை. பெயரளவிற்கு திட்டங்களை செய்து விட்டு மக்களை பற்றி கவலைப்படவில்லை.
தமிழகத்தில் எங்கள் கூட்டணி பலமாகி வருகிறது. இன்னும் 8 மாதத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணிதான் வெற்றி பெறும். மக்கள் துன்பப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். மோடி எதுவும் செய்யவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் எக்ஸ்பிரஸ் சாலை வசதி முலம் சென்னை – பெங்களூரை 3 மணி நேரத்தில் இணைக்கக்கூடிய அதிவேக சாலை உள்ளது. வந்தே பாரத் 7 வழி தடத்தில் ரயில்கள் செல்கிறது.

பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு எல்லா நல்லதும் செய்து வருகிறார். இனி ஒன்றும் செய்யவில்லை என்ற விமர்சனம் எடுபடாது. தீர்வு காணப்பட்ட மனுக்களை ஆற்றில் வீச முடியுமா? அப்போ தீர்வு காணாமல் நிறைய மனுக்கள் உள்ளதா. மக்களை பற்றி கவலைப்படவில்லை. புது பெயர்களை வைத்துவிழா எடுப்பார்கள். விநாயகரை ஆற்றில் கரைப்போம். ஆனால் அவர்கள் மனுக்களை கரைக்கின்றனர். விஜய் அரசியலுக்கு வந்து உள்ளார். அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
ஆனால் போட்டி என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான். அடுத்த இடத்திற்கு சீமானும் விஜய்யும் போட்டி போட்டு கொள்ளலாம். விஜய் மாற்று சிந்தனையை சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், விஜய்காந்த் ஆகியோரைத் தான் சேர்த்து இருக்கிறார். இவர்கள் சிந்தனையில் கட்சி நடத்துகிறார்கள். புதிய சிந்தனையில் இல்லாமல் புதிய கட்சி எதற்கு என்று தெரியவில்லை. பவுன்சர் தூக்கி போட்டது யார் என்று விவாதம் நடக்கிறது. பவுன்சர் கலாச்சாரமே தவறு. விஜய்யால் வெற்றியின் பக்கம் வர முடியாது. ஒவ்வொரு மாநாட்டிலும் அதனை நிரூபித்து கொண்டு இருக்கிறார்.” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.