நாம் மூக்கை பிடித்துக் கொண்டு போடும் குப்பைகளை அவர்கள் மூழ்கி எடுத்து சுத்தம் செய்கிறார்கள். ஆந்திராவை சேர்ந்த நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.2,700 கோடியை அரசு தருகிறது. 12 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்துள்ள தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் என்ன இடையூறு உள்ளது? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதை எதிர்த்து உழைப்பவர் உரிமை இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி பாதுகாப்பு, ஊதிய நிர்ணயம் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 10 -வது நாளாக இரவு பகலாக பாராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட முதல் 6 கட்ட பேச்சுவார்த்தைகளும் சுமுகமான முடிவை எட்டாத நிலையில் 7-வது கட்ட பேச்சுவார்த்தையில் போராட்டக் குழுவினர் 15 நிமிடங்களில் வெளியேறிய நிலையில இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

சென்னையில் தூய்மைப் பணியாளருக்கு ஆதரவாக சீமான் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, “தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவர் வெளியிட்ட அறிக்கையில் 10 முதல் 12 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை திடீரென பணி நீக்கம் செய்தது மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நகரை தூய்மையாக்கும் பணியை தனியாருக்கு அளிப்பதன் அவசியம் என்ன இருக்கிறது? பிறகு அரசுக்கு என்ன வேலை? எல்லாமே தனியார் மயம் என்றால் அரசு இங்கே என்ன செய்கிறது என்ற கேள்வி பொதுவாக எழுகிறது. போக்குவரத்து, கல்வி, மருத்துவம், சாலை போடுதல், பராமரித்தல், மின் உற்பத்தி விநியோகம் என அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. சாராயக் கடையை மட்டும் அரசு ஏற்று நடத்தும் என்பதை ஏற்றுக்கொள்கிறதா இந்த சமூகம்? நாம் மூக்கை பிடித்துக் கொண்டு போடும் குப்பைகளை அவர்கள் மூழ்கி எடுத்து சுத்தம் செய்கிறார்கள். ஆந்திராவை சேர்ந்த நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.2,700 கோடியை அரசு தருகிறது.

12 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்துள்ள தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் என்ன இடையூறு உள்ளது? இதில், தமிழக அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. மதுரையில் கலைஞர் கருணாநிதி பெயரில் ரூ.200 கோடியில் கட்டப்பட்ட நூலகத்தில் எத்தனை பேர் படித்துக் கொண்டிருக்கின்றனர்? மகாபலிபுரத்தில் ரூ.540 கோடியில் கலையரங்கம் கட்டியது எதற்காக? தமிழ்நாட்டில் தேவையில்லாத தண்டச் செலவுகள் எவ்வளவு என சொல்லுங்கள்..? தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாதா?” என சீமான் கேள்வி எழுப்பினார்.