சிவகங்கை மாவட்டத்தின் திமுகவின் வலுவான கோட்டையாக கருதப்பட்ட திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக இதுவரை எட்டு முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2006 -ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 4 முறை இங்கு கே.ஆர்.பெரியகருப்பன் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதில் 2 முறை அமைச்சராக கே.ஆர். பெரியகருப்பன் இருந்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலின்படி, திருப்பத்தூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,73,456. ஆண் வாக்காளர்கள் 1,34,270. பெண் வாக்காளர்கள் 1,39,183. மூன்றாம் பாலினத்தவர்கள் 3. இத்தொகுதியில் ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தேர்தலில் 77.32% வாக்குகள் பதிவாகின. தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில், திமுக சார்பில் தற்போதைய அமைச்சரும், 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றவருமான கே.ஆர். பெரியகருப்பன் களமிறங்கினார்.
அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. பாஜக சார்பில் கே. சி. திருமாறனும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சீனிவாச சேதுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரம்யா மோகன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் 28 சுற்றுகள் நிறைவடைந்திருந்த நேரத்தில் 127 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார் பெரியகருப்பன்.
29-வது சுற்றில் போட்டி இன்னும் நெருக்கமானது. இதில் திமுக வேட்பாளரான அமைச்சர் பெரியகருப்பன் 83,226 வாக்குகள் பெற்றிருந்தார். தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 883,196 வாக்குகளுடன் 2-வது இடத்திலும், பாஜக வேட்பாளர் கே.சி.திருமாறன் 29,009 வாக்குகளுடன் 3-வது இடமும் பெற்றிருந்தனர். 29 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், வெறும் 30 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் கே.ஆர். பெரியகருப்பன் இருந்தார்.
கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் வெல்வாரா? அல்லது புதுமுகமான தவெக வேட்பாளர் அவரை வீழ்த்துவாரா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதனால், திருப்பத்தூர் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், கடும் இழுபறிக்குப் பிறகு திருப்பத்தூர் தொகுதியில் வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வெற்றி பெற்ற அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.