டெல்லியில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே தனது கட்சி ஆதரவாளர்களிடம் சமூக வலைதளம் வாயிலாக பகிரங்கமாக மன்னிப்பு கோரிய செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி CJP அமைப்பினர் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற பேரணியில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது.

இது தொடர்பாக அபிஜீத் திப்கே தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் ஆதரவாளர்களிடம், குறிப்பாக டெல்லி காவல்துறையின் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான பெண் ஆதரவாளர்களிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் இன்னும் சிறந்த முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். காவல்துறையின் மனிதநேயமற்ற நடவடிக்கைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்க நான் இன்னும் அதிக முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்”.
நீட் தேர்வு மூலம் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான தர்மேந்திர பிரதானை ஒரே ஒரு அமைச்சராகக் காப்பாற்ற இப்படி எல்லாம் செய்கிறார்கள். இந்த அரசு இன்னும் பல இளம் மாணவர்களின் ரத்தத்தை உறிஞ்ச கூட தயங்கவில்லை. காயமடைந்த ஆதரவாளர்கள் அனைவரும் என்னை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம். உங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்” என அபிஜீத் திப்கே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது ஆதரவாளர்கள் காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளான சூழலில், அதற்குத் தலைவனாகத் தானே பொறுப்பேற்று அபிஜீத் திப்கே பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருப்பது, பாராட்டுகளை பெற்றுள்ளது. அதாவது தடியடி நடத்தியது போலீஸ்.. ஆனால் அரசு மன்னிப்பு கேட்கும் முன் ஒரு தலைவராக அபிஜீத் திப்கே மன்னிப்பு கேட்டுள்ளார். இது அவருடைய முதிர்ச்சியையும் மிகச் சிறந்த தலைமைப் பண்பையும் காட்டுகிறது.
உங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டேன் என்று வெளிப்படையாக கூறுவதற்கு தனித்துணிச்சலும் பொறுப்புணர்ச்சியும் தேவை. வெறும் அரசியல் ஆதாயத்திற்காகப் தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று களத்தில் பொறுப்பேற்கும் அவரது இந்த நடவடிக்கை, அவர் ஒரு சுயநலமற்ற, உண்மையான இளம் தலைவர் என்பதை நிரூபித்துள்ளது.