டெல்லியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த கல்லூரி மாணவி கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஜிம் ட்ரெய்னர் தலைமறைவான நிலையில் தனிப்படை தீவிரமாக தேடி வருகின்றனர். டெல்லி திலக் நகரின் நியூ மகாவீர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் முஸ்கான் என்ற கல்லூரி மாணவி வசித்து வந்தார்.
இவர் பகுதி நேரமாக மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். சம்பவம் நடந்த அன்று வீட்டில் முஸ்கான் தனியாக இருந்தார். முஸ்கான் வீட்டில் தனியாக இருப்பதை பயன்படுத்தி, அத்துமீறி உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், அவரைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் முஸ்கான் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தார்கள்.அங்கு , ரத்த வெள்ளத்தில் கிடந்த முஸ்கானை மீட்டனர்.

அத்துடன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பலத்த காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி முஸ்கான் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொடூரக் கொலையைச் செய்தது முஸ்கான் வழக்கமாகச் செல்லும் ஜிம்மில் பயிற்சியாளராக வேலை செய்து வந்த இம்ரான் தான் என்று முஸ்கானின் சகோதரர் ஆகாஷ் காவல்துறை மற்றும் உறவினர்களிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு இம்ரான் தலைமறைவாகிவிட்ட நிலையில் காதல் விவகாரமா அல்லது தொழில்முறைப் பகையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் அவரைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.