வேலியே பயிரை மேய்ந்த கதையாக ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட போதை காவலர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் காவல் நிலையத்தில் ரஞ்சித் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இரவு காவலர் ரஞ்சித் மற்றும் விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த ரவுடி சுபாஷ் ஆகிய 2 பேரும் மதுகுடித்து விட்டு பைக்கில் சென்றுள்ளனர்.
அண்ணா நகர் வாட்டர் டேங்க் அருகே அவர்கள் வந்தபோது, விருத்தாசலம் துர்க்கை நகரை சேர்ந்த தினேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்களான 18 வயதான 2 சிறுவர்கள் வந்த பைக்கை வழிமறித்து, கஞ்சா பயன்படுத்துகிறீர்களா? என கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது தினேஷ்குமார் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து செல்ல முயன்றபோது, அவர்களை ரஞ்சித்தும், சுபாசும் சேர்ந்து அசிங்கமாக திட்டி தாக்கியதோடு சிறுவன் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றனர்.

இதில் காயமடைந்த தினேஷ்குமார், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், காவலர் ரஞ்சித் மற்றும் ரவுடி சுபாஷ் மீது விருத்தாசலம் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து, 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.