கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து தெற்கே சுமார் 25 கி.மீ. தொலைவிலுள்ள சூளகிரி அருகே உள்ள எலசேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனிரத்னா. இவர் தன்னுடைய தேவைக்காக 38 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு கைப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டு, பெரிகை பகுதியிலிருந்து அரசு பேருந்து மூலம் சூளகிரி நோக்கிப் பயணம் செய்துள்ளார்.
பேருந்துபயணம் முடிந்து சூளகிரி பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், அவசரத்தில் இருக்கையில் தான் வைத்திருந்த கை பையை எடுக்க மறந்துவிட்டார். அதனால், தன் கையில் இருந்த கைப்பையை பேருந்து இருக்கையிலேயே வைத்துவிட்டு, ஏதோ ஒரு கவனத்தில் மூழ்கி, தன்னுடைய வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
கொஞ்ச நேரம் கழித்து பணப்பை தொலைந்ததை அறிந்த முனிரத்னா அதிர்ச்சியில் உறைந்து போனார். பல்வேறு இடங்களிலும் தேடியும், எங்கும் பணம் கிடைக்காததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதே நேரத்தில், சூளகிரி பஜார் தெருவைச் சேர்ந்த ஜோஸ்வின் என்ற பெண், அதே அரசு பேருந்தில் ஏறினார். அவர் இருக்கையில் அமர்ந்தபோது, அங்கிருந்த கைப்பையைக் கண்டார். அந்தப் பையைத் திறந்து பார்த்த ஜோஸ்வின், உள்ளே கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார்.
ஒரு கணம் கூட யோசிக்காமல், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு நேராக சூளகிரி காவல் நிலையத்திற்குச் சென்று அந்தப் பையை காவல்துறையினரிடம் ஒப்படைத்து, நடந்த அனைத்தையும் கூறினார். காவல் துறையினர் உடனடியாகச் செயல்பட்டு, கைப்பையில் இருந்த அடையாள அட்டை, செல்போன் எண் மற்றும் இதர ஆவணங்களை ஆய்வு செய்தனர். அந்த ஆவணங்களின் மூலம், பணத்தைத் தவறவிட்டது முனிரத்னா என்பது உறுதி செய்யப்பட்டது.
காவல் துறையினர் முனிரத்னாவைத் தொடர்பு கொண்டு, அவர் தொலைத்த பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர். காவல் நிலையத்திற்கு ஓடோடி வந்த முனிரத்னா, தனது பணம் பத்திரமாக இருப்பதைக் கண்டு கண்ணீர் மல்க மகிழ்ச்சி அடைந்தார். தான் இழந்த பணம் முழுமையாகத் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த முனிரத்னா, ஜோஸ்வினுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
காவல் துறையினரும், இக்கட்டான சூழலில் நேர்மையின் அடையாளமாகத் திகழ்ந்த ஜோஸ்வினைப் பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தனர். ஒரு சாதாரணப் பெண்ணின் இந்த உன்னதமான செயல், சூளகிரி பகுதி மக்கள் மட்டுமன்றி, சமூக வலைதளங்களிலும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.