கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற 20,000 வாக்கு வித்தியாசமும் வட இந்தியர்களின் வாக்கு தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் நடந்து வந்த ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி’ நிறைவு பெற்ற நிலையில், அம்மாநிலத்தில் இருந்து வெளியேறியுள்ள 36 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து இந்தியத் தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது.
மேலும் வட இந்தியர்கள் வேலைக்காகக் குடியேறியுள்ள மாநிலங்களிலேயே இனி வாக்குரிமை தரப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது புலம் பெயர்ந்த 36 லட்சம் பீகார் மக்களில் ஏறத்தாழ 7 இலட்சம் பேர் தமிழ்நாட்டில் குடியேறியுள்ள நிலையில், விரைவில் அவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக வாக்குரிமை பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.இதனால் தமிழக அரசியல் சூழல் மாறும் என தமிழக அரசியல் கட்சிகள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள வட இந்திய வாக்காளர்கள் எல்லாம் பாஜகவினர்தான், தமிழகத்தில் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தேவேந்திர குல வேளாளரை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களா மேடு பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது,” தமிழகத்தில் உள்ள வட இந்திய வாக்காளர்கள் எல்லாம் பாஜகவினர் தான். கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற 20,000 வாக்கு வித்தியாசமும் வட இந்தியர்களின் வாக்கு தான். வடநாட்டினருக்கு தமிழகத்தில் வாக்குரிமையை கொடுக்கக் கூடாது. தேர்தல் வரும் போது அவர்கள் ஊருக்குச் சென்று வாக்கு செலுத்தி விட்டு பின் இங்கு வரட்டும். மருத்துவமனைகள், கடைகளில் ஹிந்தியில் பெயர்கள் உள்ளது.
ஹிந்தி பேசக்கூடிய இன்னொரு மாநிலமாக இது மாறாது என்று என்ன உறுதி உள்ளது. வட நாட்டு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது, ஏடிஎம் திருட்டு நடைபெற்றது யாரையாவது கண்டுபிடிக்க முடிந்ததா? தமிழர்களை 100 நாள் வேலை திட்டம் போன்று நுட்பமாக உழைப்பின் இருந்து வெளியேற்றி விட்டீர்கள். உழைப்பின் தேவையை வட இந்தியர்கள் நிறைவேற்றும் போது அவர்கள் தவிர்க்க முடியாதவர்களாக மாறிவிடுவார்கள் அப்போது 500 ரூபாய்க்கு வேலை செய்யும் வட இளைஞர்கள் ஐயாயிரம் ரூபாய் கேட்டால் என்ன செய்வீர்கள்.
தமிழகத்தில் இன்று கூலியாக இருக்கும் வட மாநில இளைஞர்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முதலாளியாக மாறிவிடுவார்கள் ஈழத்தில் அடித்து விரட்டும் போது அகதியாக இருக்கக்கூடிய ஒரு இடம் இருந்தது ஆனால் இங்கே வட இந்தியர்கள் அடித்து விரட்டினால் எங்கே போவது என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள். வட இந்தியர்கள் எதிர்காலத்தில் தமிழர்களை அடித்து விரட்டுவார்கள். நிலமற்ற அகதிகளாக தமிழர்கள் மாறி அடிமையாகி நாடோடியாக திரிவான். என்னை முதலமைச்சராக்கினால் வட இந்தியர்கள் எப்படி வந்தார்களோ அப்படி திரும்பி செல்வார்கள். என் பிள்ளைகளுக்கு நான் வேலை கொடுத்து விடுவேன்” என சீமான் கேள்வி எழுப்பினார்.