இந்த கைது நடவடிக்கை காரணமாக உதயநிதி ஸ்டாலினை இளைய கலைஞராக மாற்றி வருகின்றனர். இன்று முதல் உதயநிதி ஸ்டாலினை ”இளைய கலைஞர்’” என்று அழைப்பதற்கு விஜய் வழிவகுத்துள்ளார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஆட்சியில் இருக்கும் விஜய் எல்லா ஆட்சியையும் மிஞ்சும் அளவிற்கு சர்வாதிகாரத்தின் உச்சத்திலிருந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். சட்டசபை கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது என்பது எத்தகைய ஜனநாயக விரோத செயல்.? இந்திய ஜனநாயகத்தை கண்டிக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது.

விஜய் ஜனநாயகம் என்ற படத்தில் நடித்தாரே தவிர ஜனநாயகம் குறித்து A, B, C கூட தெரியாதவர்தான் முதலமைச்சர். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் செய்ய வேண்டிய வேலையைத்தான் உதயநிதி செய்துள்ளார். மு.க ஸ்டாலின் ஆட்சியில் டெல்டா மாவட்டங்களுக்கு சரியான நேரத்திற்கு காவிரி தண்ணீர் வந்து சேர்ந்தது. இது குறித்து பேசும்பொழுது கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் தண்ணீர் வரவில்லை என்ற வயிற்றெரிச்சலில் திரிஷா பெயரை கூறியுள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது? தண்ணீர் என்பது குடிப்பதுதானே!
திரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா? அவரே தனிப்பட்ட முறையில் எதுவும் தெரிவிக்கவில்லை. மக்கள் ஆரவாரத்தில் பேசுவது வாடிக்கை. இதை தாங்கிக் கொள்ள முடியாமல் கைது நடவடிக்கையை இந்த தவெக அரசு கையாண்டுள்ளது. எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் ஏன் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற நிறைய பேசி உள்ளோம்.

ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதியப்பட்டது இல்லை. அவதூறு பேச்சு என்ற வழக்கில் இதுவரை கைது நடவடிக்கை செய்யப்பட்டதே கிடையாது. கைது நடவடிக்கை காரணமாக உதயநிதி ஸ்டாலினை இளைய கலைஞராக மாற்றி வருகின்றனர். இன்று முதல் உதயநிதி ஸ்டாலினை இளைய கலைஞர் என்று அழைப்பதற்கு விஜய் வழிவகுத்துள்ளார். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்து விட்டு ஆளில்லா மைதானத்தில் முதல்வர் பந்தாட நினைக்கிறார். சட்டசபையில் பதில் கூற பயந்துதான் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர் என ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.