அரியலூர் மகிளா நீதிமன்றம் செந்துறை அருகே 14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த தளவாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி மகன் நாராயணசாமி என்பவர், 14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி 29.09.2023 அன்று தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் தளவாய் காவல் நிலையத்தில் 29.09.2023 அன்றே எதிரி மீது வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து குவாகம் வட்டார காவல் ஆய்வாளர் சித்ரா அவர்கள் முதற்கட்ட விசாரணையில் நாராயணசாமி குற்றச்செயலில் ஈடுபட்டதை உறுதி செய்து, எதிரி நாராயணசாமியை கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்நிலையில், இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை 18.07.2025 நேற்று அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை அனைத்தையும் கேட்டு, மற்றும் பார்த்து அறிந்த நீதிபதி மணிமேகலை அவர்கள், எதிரி நாராயணசாமி குற்றவாளி என கூறி, நாராயணசாமிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாத காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.