தேர்தலுக்கு முன்பு விஜய் என்ன பேசினார், ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யக்கூடாது என்று.. இப்போது விஜய் என்ன செய்கிறார். நம் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஆய்வு செய்கிறார். இதற்கு பெயர் என்ன சார்.. ஊரான் வீட்டு நெய்யில் அவர் வீட்டுக்கு ஸ்வீட் செய்யுறாரு.. என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், இன்று ஆடிப்பெருக்கு விழா. வழக்கமாக இன்றைய தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.
ஆனால் இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை. இதுமட்டுமில்லை குறுவை பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் நடைபெறுமா என விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள். ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி கவலைப்படாமல் நிர்வாக திறனற்று இருக்கிறார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை நமது தலைவரே நேரடியாக திறந்து வைத்தார். ஆனால் இப்போது ஜூன், ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் வரவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கூட ஜூன், ஜூலை மாதங்களில் 42 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலை. அதைப் பற்றி விஜய் பேசாமல் மவுனமாக உள்ளார். அவரது எண்ணம் முழுக்க திமுக தலைவர்கள் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்றே உள்ளது. இந்த அரசின் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதனால் தான் காவிரி ஒழுங்காற்று குழு ஆணைப்படி தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
ஆனால் இதையும் திசை திருப்ப தான் முயற்சிக்கிறார்கள். எதாவது ஒரு பிரச்சனை வந்தால் போதும் உடனே அதனை திசை திருப்ப ஆய்வு என விஜய் ரீல்ஸ் போட கிளம்பிவிடுகிறார். ஏன் இன்று தஞ்சையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தை திசை திருப்பக் கூட முதல்வர் காஞ்சிபுரம் போய் ஆய்வு செய்ய இருக்கிறார். சமீபத்தில் சென்னையில் உள்ள மெட்ரோ பாலத்தில் ஏறி ஆய்வு செய்தார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை எல்லாம் அவர் ஆய்வு செய்கிறார்.
இதற்கு அவரது பாணியிலேயே பதில் சொன்னால் தான் தெரியும். தேர்தலுக்கு முன்பு விஜய் என்ன பேசினார், ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யக்கூடாது என்று.. இப்போது விஜய் என்ன செய்கிறார். நம் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஆய்வு செய்கிறார். இதற்கு பெயர் என்ன சார்.. ஊரான் வீட்டு நெய்யில் அவர் வீட்டுக்கு ஸ்வீட் செய்யுறாரு.. இப்படி சொன்னால் தான் புரியும். தேர்தல் அறிக்கையில் சொன்னதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா.. இல்லை..

தவெக ஆட்சிக்கு வந்து சொந்தமாக ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. தேர்தல் அறிக்கையில் கூறியபடி விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை தான் கூட்டவில்லை, போராடி வரும் விவசாயிகளையாவது சந்தித்து அவர்கள் கோரிக்கையினாவது கேட்கலாம் அல்லவா.. இதையெல்லாம் செய்யாமல் ரீல்ஸ் போடுகிறார்கள். ரீல்ஸ் வெறியில் விஜய் முதல் எல்லாரும் ரீல்ஸ் போடுவதில் தான் கவனம் செலுத்தி வருகிறார்கள்” என உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்துள்ளார்.