திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள தத்தைமஞ்சி பழங்குடி கிராமத்தை சேர்ந்த மணி-மாரியம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகள் சந்தியா. இவர் சிறு வயது முதலே படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டு படிப்படியாக படித்து இளங்கலை அறிவியலில் கணித பாடம் முடித்து குடும்பத்தின் முதல் பட்டதாரியானார்.
தொடர்ந்து முதுகலை அறிவியல் பட்டம் பெற்று, தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார். அதன்பின், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சந்தியாவை, திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலராக நியமித்து பணி ஆணை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தின் முதல் பழங்குடிப் பெண் அலுவலராக பதவி ஏற்று பெருமை சேர்த்த சந்தியாவை தத்தைமஞ்சியில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் வழிபாடு செய்து, அங்கிருந்து மேளதாளத்துடன் பட்டாசுகள் வெடித்து நடனமாடி சந்தோஷத்தை வெளிப்படுத்தி ஊர்வலமாக பழங்குடி கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.

விழா மேடையில் முன்னாள் தத்தைமஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, சமூக ஆர்வலர்கள் சரவணன் உள்ளிட்ட கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக சேவகர்கள் என பலதரப்பட்ட மக்கள் சந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.தன் மேல் நம்பிக்கை வைத்து தனது திறமையை வெளிப்படுத்தி, கடின உழைப்பால் சாதிக்க முடியும் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலர் சந்தியாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.