தூத்துக்குடியில் அமுதா நகரை சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞர் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கி, அதனை கடை திறக்காத நேரம் மற்றும் இரவில் கூடுதல் விலைக்கு விற்றுவந்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாநகரம் தென்பாகம் காவல்துறையினர் கடந்த 17-ந் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றார்களாம். இந்நிலையில் விசாரணையின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 17-ந் தேதி காலையில் காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் மாலை வரை எங்களிடம் என் மகனை கைது செய்தது பற்றி சொல்லவே இல்லை. என் மகன் மயங்கிவிழுந்துவிட்டான் என்று சொல்லி மருத்துவமனையில் சேர்க்கும் போது தான் எங்களுக்கு காவல்துறையினர் தெரிவித்தனர் என பெற்றோர் கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கும் போதே அவனது தலையில் காயம் இருந்தது. கை, மற்றும் தலையிலும் கட்டு போடப்பட்டது. காவல்துறையினர் தான் அடித்து கொன்று இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே சமயம், தலை, காலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம் தனக்கு எப்படி அடி பட்டது என்பது குறித்து உறவினர் ஒருவரின் செல்போனில் பேசியுள்ளார். அந்த வீடியோவில் காவல்துறையினர் என்னை அடித்தார்கள் என இளைஞர் அருணாச்சலம் வாக்குமூலம் அளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.