திருநெல்வேலி மாவட்டம், டவுனை அடுத்த பாறையடி மந்திரமூர்த்தி தெருவை சேர்ந்த பிளம்பர் வேலை பார்த்து வரும் குருநாதன். இவரது மகன் ஆவுடையப்பன். இவருக்கு திருமணமாகி 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். ஆவுடையப்பன் இன்று காலை 9 மணியளவில் சங்கரன்கோவில் – டவுன் மெயின்ரோடு பகுதியில் உள்ள கோட்டையடி ஊய்காட்டு சுடலை மாடன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது வயல்காடு வழியாக அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென ஆவுடையப்பனை வழிமறித்து சுற்றி வளைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஆவுடையப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர், முகம் முழுவதுமாக சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்த வயல்வெளிகள் வழியாக தப்பிச்சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தச்சநல்லூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே தகவல் கேள்விப்பட்டு ஆவுடையப்பனின் மனைவி மற்றும் உறவினர்களும் அங்கு திரண்டு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆவுடையப்பனின் உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவத்தை நிகழ்த்திய கொலையாளிகள் யார்? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.