காவல் துறை மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை… இவர்கள் எல்லாம் அம்பு…. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என எவ வேலு தெரிவித்தார். கரூரில் சாலை பணியை மேற்கொள்ளாமல் கடந்த திமுக ஆட்சிக் காலத்தின்போது ரூ. 3.23 கோடி மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவும், திமுக முன்னாள் அமைச்சருமான எவ வேலு மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் 9 பேர் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எவ வேலுவின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் கடந்த மாதம் 25-ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜூலை 3-ஆம் தேதி நேரில் ஆஜராக எவ வேலுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால், அந்த தினத்தில் உடல்நலக் குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதால் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருநதார். இதையடுத்து எவ வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், லஞ்ச ஒழிப்புத் துறை பிறப்பித்த லுக்அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எவ வேலு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணையின்போது, இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்து, லுக் அவுட் நோட்டீஸுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. வழக்கை ரத்து செய்யக் கோரிய எவ வேலுவின் மனு ஜூலை 27-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நீதிமன்றம் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்ததையடுத்து, முன்னாள் அமைச்சர் எவ வேலு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜராகினார்.
காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை என 5 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து, எவ வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 15-ஆம் தேதியன்று காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டு இருந்தார்கள். அதனடிப்படையில், நேற்று முந்தைய தினம் இன்று ஆஜராகும்படி கடிதம் கொடுத்தார்கள்.
இன்று காலை 11 மணி முதல் 5 மணி நேர விசாரணை நடத்தப்பட்டது. பல்வேறு கேள்விகளை அவர்கள் கேட்டனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். கேள்விகள் அனைத்திற்கும் உரிய உண்மையான பதில்களை அளித்துள்ளேன். எனது பதில் 100 சதவீதம் உண்மை. அதில் எந்தவித கலப்படமும் இல்லை. காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். விசாரணைக்கு மீண்டும் அழைத்தால் வருவேன் என்று கூறியுள்ளேன்.
மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. நான் எந்தவித குற்றமும் செய்யவில்லை. தவெக அரசாங்கம் திட்டமிட்டு என்னை இதில் இழுத்திருக்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. 28-ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு வரவுள்ளது. இவர்கள் எல்லாம் அம்பு. அம்பு எய்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள். காவல் துறை மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. விசாரணைக்கு அழைத்தால் மீண்டும் வருவேன் என எவ வேலு தெரிவித்தார்.