சும்மா சீன் போட்டு.. ரீல்ஸ் போட்டு செல்ல முடியாது. போட்டோ சூட் மட்டும் செய்து சென்றுவிடலாம் என நினைக்கிறார்கள். ரீல் ஹீரோ விஜய்..!! ரியல் ஹீரோ ஆவாரா..!? என தேமுதிக பொதுச்செயலாளரும், விருதாச்சலம் தொகுதி எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூரில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “ஓட்டு போட்ட மக்கள் தான் தமிழக அரசின் நிலைப்பாட்டை சொல்ல வேண்டும். அதை நான் உறுதியாக சொல்கிறேன். இன்றைக்கு எம்எல்ஏவாக நாங்கள் தொகுதிக்கு செல்கிறோம், ஆய்வு செய்கிறோம் எந்த ஒரு அடிப்படை பணி கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் தவெக ஆட்சியமைத்து மூன்று மாதங்கள் ஆகப்போகிறது.
இது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது. இது சினிமா கிடையாது, சும்மா சீன் போட்டு.. ரீல்ஸ் போட்டு செல்ல முடியாது. போட்டோ சூட் மட்டும் செய்து சென்றுவிடலாம் என நினைக்கிறார்கள். பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இது நிச்சயமாக நல்ல அரசா இல்லையா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நாங்களும் பொறுத்திருக்கிறோம்.
என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். என்னுடைய பதில்கள் சட்டசபை கூடிய பிறகு கூறுவேன். நான் சட்டசபையில் பேசியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வெறும் விருதாச்சலம் தொகுதியில் மட்டுமல்ல, எல்லாரைப்பற்றியும் பேசுகிறோம். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஒகேனகலில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளோம். இன்றைக்கு வரை காவிரியில் தண்ணீர் விடவில்லை. மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகா அரசு மிகவும் உறுதியாக சொல்கிறார்கள்.

நம்முடைய அரசு என்ன செய்ய போகிறது. அரிசி விலை கிலோ ரூ.40 முதல் 50 உயர்ந்துள்ளது. ஒரு டன் அரிசி ரூ.15,000 உயர்ந்துள்ளது. மக்கள் அரிசியை நம்பியுள்ளனர். அரிசிக்கே இந்த நிலைமை என்றால், விலை வாசி உயர்வு எப்படி போகும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். சினிமா பார்த்து அழுது சீன் ஓட்ட கூடாது. இது மக்களின் வாழ்வாதாரம். ஜூலை மாதம் இறுதியாகிவிட்டது. மழை இல்லை. தண்ணீர் இல்லை.
தென் மாவட்டங்களில் தொடர்ந்து லாக்கப் மரணம் நடக்கிறது. தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இனியும் இது தொடரக்கூடாது. மக்களை பாதுகாப்பது தான் காவல்துறையின் வேலை. நீட் வேண்டாம் என்று மக்கள் போராடினால் அதை ரத்து செய்வது தான் அரசின் வேலை. மக்களுக்காக தான் சட்டம், திட்டம் எல்லாம். மக்கள் ஏற்கவில்லை என்றால் அது தேவையில்லை. உரிமையை நிலை நாட்ட போராட்டம் நடக்கிறது.
தவறு நடந்ததால் ஒரு அமைச்சரை பதவி விலக சொல்கிறார்கள். பதவி விலகினால் என்ன. செய்த தவறுக்கு ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் இருந்தால் எப்படி. நாங்கள் மக்கள் பக்கம் தான் நிற்போம். 717 மதுகடைகளை மூடுவோம் என்றார்கள். எத்தனை கடைகளை மூடினார்கள். அதற்கு இணையான கடைகள் திறக்கப்படுகின்றன. மாற்றம் என்றார்கள். என்னை பொறுத்தவரை ஒரு மாற்றமும் நடைபெறவில்லை. கண்துடைப்பு தான் நடக்கிறது. ரீல் ஹீரோ ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்”என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.