ஜனநாயகம் என்பது ஒரு வாழ்வியல் முறை.. வெறுமனே பேசுவது, எழுதுவது மட்டும் ஜனநாயகமாக இருக்க கூடாது. ஜனநாயகம் குறித்து படமெடுத்தால் மட்டும் போதாது ரீல்ஸும், போலி கண்ணீரும் எல்லா காலத்திலும் உதவாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இது குறித்து கிருஷ்ணசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உயிரை தமிழகம் கட்சியின் முன்னெடுப்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 8 மாத காலமாக மாஞ்சோலை மக்களுக்கு சட்டப்பூர்வ அடிப்படையில் வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் வழங்காதது கண்டிக்கத்தக்கது. அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு குடிநீர் , மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும்.. அரசின் நிர்வாகத்திற்குள் போக வேண்டும் என்பது இளைஞர்களின் கனவாக உள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்க நடத்தப்படும் போராட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. நீட் வினாத்தாள் விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வது தவறில்லை.
போராடும் உரிமையை இந்திய அரசியல் சாசனம், நம் குடிமக்களுக்கு வழங்கி இருக்கிறது. சிறிய அல்லது பெரிய என எப்படிப்பட்ட போராட்டமாக வேண்டுமானாலும் இருக்கலாம். மாணவர்கள் ஒரு கட்சிக்கு எதிராக ஒன்றும் போராடவில்லை, அவர்களின் உரிமைகளுக்காக தானே போராடுகிறார்கள். இந்த சூழலில் அவர்கள் போராடுவதை எதற்கு தடுக்க வேண்டும்? விஜய் தலைமையிலான தவெக அரசு, மத்திய அரசுக்கு நண்பன் போன்றே இருக்கிறார்கள்.
ஆனால் அதே நேரம் நீட் தேர்வுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்றம் சொல்கிறார்கள். இதை பார்த்தால் “பூனைக்கு நண்பன்; பாலுக்கு காவலன்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. ஜனநாயகம் குறித்து படமெடுத்தால் மட்டும் போதாது, அது குறித்து முழுமையான புரிதல் வேண்டும். ஜனநாயகம் என்பது ஒரு வாழ்வியல் முறை.. வெறுமனே பேசுவது, எழுதுவது மட்டும் ஜனநாயகமாக இருக்க கூடாது.
வாழ்வே ஜனநாயகமாக இருக்க வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதில் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டு அமைச்சர்கள் இன்னும் ரசிகர்கள் மன நிலையிலிருந்து வராமல் உள்ளனர். உண்மையில் ஜனநாயகம் என்ற வெற்று வார்த்தை பேசுவது உதவாது.. ஜனநாயகனாக வாழ வேண்டும்.. ரீல்ஸும், போலி கண்ணீரும் எல்லா காலத்திலும் உதவாது.. கொஞ்ச நாள் எல்லாம் நல்லா தான் இருக்கும்..
நாடாளுமன்ற தேர்தலுக்கு 3 ஆண்டுகள் உள்ளது. அரசியல் நிலைப்பாடு தேர்தலுக்கு முன் 2 அல்லது 3 நாட்களில் கூட மாறும்.. 2029 தேர்தலில் என்ன நிலை வரும் என்பதை இப்போதே கணிக்க முடியாது.. கட்சி கூட்டணி மாறுவது அரசியல் கட்சிகள் இயல்பு. ஆனால் சில கட்சிகள் அதனையே வாடிக்கையாக வைத்துள்ளது.. சந்தர்ப்பத்துக்கும் பதவிக்கும், ஆதாயத்திற்காகவும், கட்சியில் இணைபவர்கள் யார்? என்பதை மனதில் வைத்து வரும் காலத்தில் தவெக செயல்பட வேண்டும்” என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.