இடுக்கு பிள்ளையார் கோவிலில் துவாரத்தில் சிக்கி ஆந்திர இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் அதே இடத்தில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டு வெளியே வர சிரமப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கோவில்களுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். கிரிவல பாதையில் ஏராளமான கோயில்கள் மற்றும் ஆசிரமங்கள் அமைத்துள்ளன. நாள்தோறும் கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் கிரிவல பாதைக்கு வந்து மலையான வீற்றிருக்கும் சிவனை வலம் வந்து, வழியில் இருக்கும் கோயில்களிலும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
அந்த வகையில் கிரிவல பாதையில் இடைக்காட்டுச் சித்தர் என்பவரை மூன்று யோக யந்திரங்களை புதைத்து வைத்துள்ளதாக ஐதீகம் கொண்ட இடுக்கு பிள்ளையார் கோவில் ஓன்று உள்ளது. இந்த கோயிலில் சிறிய துவாரம் போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்தபடியே உள்ளே சென்று மெதுவாக கைகளை ஊன்றிக் கொண்டு முன்னோக்கி நகர்ந்து முன்வாசல் வழியாக வெளியே வர வேண்டும்.

குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்ததும் நந்தியும் இடுக்கு பிள்ளையாரும் இருப்பார்கள். அவர்களை வணங்கிவிட்டு செல்லலாம். இந்த கோயில் தாயின் கருப்பை போல் காட்சி தருவதால் இந்த துவாரத்தில் நுழைந்து செல்வோருக்கு எந்தவித கர்ப்பப்பை பிரச்சனைகளும் வருவதில்லை. மேலும் பில்லி சூனியம் உள்ளிட்ட கெட்ட சக்திகளும் நீங்குவதாக ஒரு நம்பிக்கை.
அப்படி கடந்த 24-ந் தேதி இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் கிரிவலம் வந்தார். இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்த மணிக்குமார், குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தப்படியே நுழைந்தார். குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அவரை அங்கிருந்தவர்கள் வெளியே எடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர் சற்று உடல் பருமனாக இருப்பதால் அவரால் வெளியே வர முடியவில்லை. சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் அவர் மயங்கினார்.

எனினும் அங்கிருந்த பக்தர்கள் அவரை வெளிய கொண்டு வந்துவிட்டு பிறகு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணிக்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்றைய தினம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார்.

அப்போது அவர் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு சென்றார். அங்கிருக்கும் துவாரத்தில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய முயன்றார். ஆனால் அவரும் அந்த குறுகிய பாதையில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரின் கைகளை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் இடுக்கு பிள்ளையார் கோவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.