சமூக ஊடகங்களின் அதீதப் பயன்பாடு மற்றும் தவறான வழிகாட்டுதல்களால் தனிமனித ஒழுக்கம் மற்றும் குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் இவரையெல்லாம் மறந்து குன்றத்தூர் அபிராமி முதல் இன்றைய அம்முகுட்டி வரை தொடரும் இத்தகைய சம்பவங்கள், நமது தமிழ் சமூகத்தின் அறநெறி வீழ்ச்சியைப் பறைசாற்றுகின்றன.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் முத்துநகர் பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்தில் நடத்துனர் சந்தோஷ். இவருடைய மனைவி அம்முகுட்டி. இந்தத் தம்பதிக்கு 7 வயதில் மகிலேஷ் என்ற மகனும், 4 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும் உள்ளனர். மகிழ்ச்சியாக குடும்பம் சென்று கொண்டிருந்த நிலையில், கள்ளக்காதல் என்ற விஷம் புகுந்ததால் ஒட்டுமொத்த வாழ்வும் சிதைந்து போயுள்ளது.
அம்முக்குட்டிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் சந்தோஷ் வேலைக்குச் செல்லும் நேரங்களில், அந்த இளைஞர் அடிக்கடி அம்முகுட்டியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் 11-ந் தேதி, வழக்கம் போல சந்தோஷ் வேலைக்கு சென்றிருக்கிறார்.

அந்த சமயத்தில் அம்முக்குட்டியின் கள்ளக்காதலன் அவர் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் அம்முகுட்டியும் அவரது கள்ளக்காதலனும் தனிமையில் இருந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் அவர்களுக்கு இடையூறாக இருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அம்முக்குட்டி, தன் பெற்ற பிள்ளைகள் என்றும் பாராமல் மகிலேஷ் மற்றும் ஸ்ரீநிதியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். கள்ளக்காதலனுடன் இருப்பதற்குத் தடையாக இருந்த மழலைகளைத் தாக்கியதில் குழந்தைகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.
வேலை முடிந்து வீடு திரும்பிய சந்தோஷ், தன் குழந்தைகள் காயங்களுடன் அழுது கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிள்ளைகளிடம் விசாரித்தபோது நடந்த கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. உடனடியாகக் காயமடைந்த குழந்தைகளை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அவர் அழைத்துச் சென்றார். பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் மனைவியின் தவறான நடத்தை குறித்து சந்தோஷ் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, விசாரணையில் அம்முகுட்டி கள்ளக்காதலுக்காகக் குழந்தைகளைத் தாக்கியதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்முகுட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள அவருடைய கள்ளக்காதலனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.